tamilnadu

img

வேரில் வெந்நீர் ஊற்றும் மோடி அரசு! - எம்.இ.நிருபன்

இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்களின் உயிர்கள் கல்வி  சார்ந்த அல்லது பொருளாதாரப் பிரச்சனை களால் பறிபோவது சாதாரண நிகழ்வாக மாறி யிருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி  சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு நாட்டில் நடந்த தற்கொலைகளில் இவை 7.6 சதவீதம் ஆகும். நாட்டின் பெரிய உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் மர்மமான இறப்புகளுக்கு இது நாள் வரையில் தீர்வு காணப்படவில்லை. 2018 முதல் 2023 வரை 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 98 மாணவர்கள் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த 98 மாணவர்களும் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி  போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தற்கொலைகள்

2013ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வி னால் அனிதா தொடங்கி ஜெகதீசன் வரை தமிழ்நாட்டில் மட்டும் 18க்கும் மேற்பட்ட மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர்களை நீட் தேர்வுக்கு பறிகொடுத்துள்ளோம். ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது. தேர்வு பயத்தினால் மட்டும் 18  வயதிற்கு உட்பட்ட 578 மாணவிகள் உட்பட 1123  மாணவர்களை நாம் இழந்துள்ளோம். போட்டி தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து  கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2095.  இத்தகைய தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே யிருக்கும் நிலையை அரசு உளவியல் ரீதியான பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க மறுக்கிறது.

வேலைவாய்ப்பிலும்  தொடரும் நெருக்கடி 

இந்திய கல்வி அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் ஆண்டொன்றிற்கு 2.5 லட்சம் பட்டதாரிகளை இந்தியா உருவாக்கிவருகிறது. ஆனால், இவர் களில் 45  சதவீதமானவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பை பெறுகின்றனர். ஆண்டிற்கு லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் நாட்டில் 18.46 சதவீதமான பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. கல்வியில் நெருக்கடிகளை தாண்டி வெளியே வரும் பட்டதாரிகளின் மிச்சமிருக்கும் வேலை வாய்ப்புகளையும்  கேள்விக்குறியாக்கும் வகையில் மோடி அரசு பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரை வார்த்து எஞ்சி யிருந்த வேலைவாய்ப்புகளையும் பறித்துள்ளது. 

சலுகைகள் யாருக்காக?

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உயர்கல்வி பயில இருக்கும் 4,61,017 மாணவர்கள் ரூ.39,268.82 கோடி கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். அதில் எந்த கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால், இதே காலத்தில் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.24 லட்சம் கோடி தள்ளுபடி செய்து ஒன்றிய மோடி அரசு அறிவித்திருக்கிறது. நீட், கியூட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு (Couching Centre) அனுமதி வழங்கி ஆயிரமாயிரம் பெற்றோர்கள் உழைத்து உருவாக்கிய செல்வத்தை தனியாரிடம் கொண்டு சேர்க்க துணை போகிறது.  ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பயிலக்கூடிய மாணவர்கள் பயன்படுத்தும் கல்வி உபகரணப் பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்திருக்கும் ஒன்றிய அரசு, பெரும் பணக்காரர்கள் தங்களின் ஆடம்பரத்திற்காக பயன்படுத்தும் வைரம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களுக்கு 1சதவீத வரி விதித்திருக்கிறது. 

கல்வி உரிமை போராட்டம்

கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை அடுத்தடுத்த ஆண்டுகளில் மோடி அரசு குறைத்துக்கொண்டே வந்துள்ளது. நீட், கியூட் தேர்வுகள் மூலம் ஏழை  மாணவர்களின் உயர்கல்வி கனவை சிதைத் திருக்கிறது. கல்வி உதவித்தொகைகளை நிறுத்தி வைத்து சிறுபான்மை மாணவர்களின் கல்வியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. புதிய  தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வியில் காவி மயத்தை திணிப்பதோடு வேத கால குலக்கல்வி முறையை இந்தியாவில் அமல்படுத்திட நினைக்கிறது. கல்வி நிலையங்களில் மாணவர்களை மத, சாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையையும், பாடப்புத்தகங்களில் என்சிஇஆர்டிமூலம் வரலாற்றை திரித்து எழுதும் வேலையையும் செய்து வருகிறது.  இப்படியான பாஜக அரசின் கல்வி ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக எழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும், கல்வி உரிமையை மீட்டிட, பிற்போக்குவாத கல்வி யை இந்திய மண்ணிலிருந்து விரட்டிட, இந்தி யாவின் கடைக்கோடி மாணவனுக்கும் இலவச மான, தரமான மற்றும் அறிவியல்பூர்வமான கல்வியை உறுதிப்படுத்திட, நடைபெறும் தொடர்  போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாக ஜூன் 22 அன்று, நீட்டை ரத்து செய்ய வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் களுக்காக களமிறங்குகிறது. அப்போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் கரம் கோர்ப்போம்.