விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் தனியார் விதை நெல் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை
தஞ்சாவூர், ஜுன் 7- நடப்பு குறுவைப் பருவத்தில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் தனியார் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு குறுவை பருவத்தில் தரமான நெல் விதைகள் விற்பனை குறித்து விதை ஆய்வு பிரிவு அலுவலர்கள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவ நெல் சாகுபடியில் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து, அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகள் சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்குக் கிடைத்திடும் வகையில், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, விதை ஆய்வு அலுவலர்கள் மாவட்டத்துக்குட்பட்ட அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீராய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறுவைப் பருவத்தில், பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எனவே, குறுகிய கால நெல் ரகங்கள் நடப்பு பருவத்துக்கு ஏற்ற ரகங்கள் என்பதால், தனியார் விதை விற்பனையாளர்கள் மேற்கூறிய தரமான நெல் ரகங்களின் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விதை சட்ட விதைகளின்படி விற்பனை செய்ய வேண்டும். அரசின் விதை உரிமங்கள் பெற்று, சான்று பெற்ற மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்திடவும் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச் சட்ட விதிகளை மீறிய 9 குவியல்களில் ரூ. 7.3 லட்சம் மதிப்பிலான 9.62 மெ.டன் விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள படி விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம் செய்திட இதுவரை 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை கட்டுப்பாடு ஆணை 1983 இன் படி அரசின் விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதும் தஞ்சாவூர் மாவட்டத்தில், விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையில் சிறப்பு விதை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர், கொடிமரத்து மூலை, பூதலூர், கும்பகோணம், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விலை மற்றும் எடை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளவும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நேரடி ஆய்வில் விதை விற்பனையாளர்கள் கடைப் பிடிக்க வேண்டிய விதைச்சட்ட விதிகளான விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-இன்படி விதை விற்பனை மேற்கொள்ள வேண்டும். விதை சட்டவிதிகளை மீறுவோர் மற்றும் நடப்பு குறுவை பருவத்தில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் தனியார் விதை விற்பனையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.