tamilnadu

இன்றும் நாளையும் புதுகையில் அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

இன்றும் நாளையும் புதுகையில் அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

புதுக்கோட்டை, மே 22-  புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.  மே 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கந்தர்வக்கோட்டை பேருந்துநிலையம் அருகில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, மாலை 7.30 மணிக்கு மங்களாகோவிலில் திமுக சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கபடிப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.  மறுநாள் (மே 24) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்பு நிலையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்ட அரசாணைகளை அவர் வழங்குகிறார். பின்னர், மாலை 4 மணிக்கு கட்சியில் மறைந்த மூத்த நிர்வாகி மிசா இரா. துரைமாணிக்கம் படத்தை திறந்து வைக்கிறார். அதன் பிறகு, மாலை 4.30 மணிக்கு நத்தம்பண்ணையில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  தொடர்ந்து 5.30 மணிக்கு, பள்ளத்துவயல் பகுதியில் திமுக மருத்துவ அணி சார்பில் நடைபெறும் பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி மாநிலக் கருத்தரங்கில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு, இளையாவயல் அருகேயுள்ள கல்லுக்குவியல்பட்டியில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குகிறார். தொடர்ந்து சாலை வழியாக திருச்சியைச் சென்றடைகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன், எம்பி எம்எம். அப்துல்லா, மேயர் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, மருத்துவ அணியின் மாநிலத் துணைச் செயலர் அண்ணாமலை ரகுபதி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.