காணொலி வாயிலாக துணை முதல்வர் திறந்து வைப்பு
ஆலங்குடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை
புதுக்கோட்டை, ஜுன் 12- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருராட்சியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தையினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆலங்குடி வாரச் சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:- ஆலங்குடி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2.08 கோடி செலவிலும், பொன்னமராவதி பேரூராட்சியில், ரூ.2.18 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தைகளையும், அரிமளம் பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.43 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் அபிவிருத்தி பணியினையும், கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.0.54 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆலங்குடி பேரூராட்சி, மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்பட்டது என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம், செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) ஜீவா சுப்பிரமணியன், செயல் அலுவலர் அ.சுந்தரராஜன், வட்டாட்சியர் பி.வில்லியம் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.