tamilnadu

பருவம் தவறி பெய்த மழையால் கடும் பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சென்னை,பிப்.15- பருவம் தவறி பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெல், உளுந்து, பருத்தி விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் பொதுச் செயலாளர் பி. சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த கடுமையான மழையினால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைத்தும், அழுகியும் விவசாயிகள் மீளமுடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதே போல், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உளுந்து, பயிறு மற்றும் பருத்தியும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்து கொள்முதல் மையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வஞ்சிக்கும் பாஜக அரசு இந்த பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது ஒன்றிய மாநில அரசுகளின் பொறுப்பாகும். ஆனால், ஒன்றிய பாஜக அரசாங்கம் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நவம்பர் மாதம் பெய்த அபரிமிதமான மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு ரூபாய் 6230.45 கோடியை நிவாரணநிதியாக வழங்க வேண்டுமென்று கோரியிருந்தது.

ஆனால், பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பிறகும் இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரண உதவி வழங்காததற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றாந்தாய் மனப்போக்கு! கடந்த காலத்திலும் இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதியில் சொற்பமான தொகையை வழங்குவதையே ஒன்றிய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. எனவே, இந்திய ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை கைவிட்டு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. பயிர்க்காப்பீட்டு நிறுவனம் மாதிரி அறுவடையை மழைக்கு முன்பாகவே முடித்துவிட்டது. அதனால் பிப்ரவரி மாதம் பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை. எனவே, நெல், உளுந்து, பயிறு, பருத்தி ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்புகளுக்கு ஆளாகியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சண்முகம் தெரிவித்திருக்கிறார்.