கோயம்புத்தூர், பிப். 7 - எளிய மக்கள் மீது சுமத்தப்பட்ட நூறு சதவிகிதம் சொத்து வரியை குறைக்க சிறப்புத் தீர்மானம் இயற்றக் கோரி, கோவை மாமன்றத்தில், சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் கவுன்சில ர்கள், மேயரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவை மாநகராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில், விக்டோரியா ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் கலந்து கொண்டார். மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாமன்றக் கூட்டம் துவங்கிய உடனேயே மாநகராட்சியின் 100 சதவிகித சொத்து வரி உயர்வு, 1 சத விகித அபராத வரி, டிரோன் சர்வேயினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலைவர் வி. இராமமூர்த்தி, காங்கிரஸ் குழுத் தலைவர் அழகு ஜெயபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுத் தலைவர் சாந்தி, கொமதேக குழு தலைவர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன் சிலர்கள் மேயர் ரங்கநாயகியை முற்றுகையிட்டனர். 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை 50 சதவிகிதமாக குறைப்பதற்கு சிறப்புத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினர். கவுன் சிலர்களை மேயர் ரங்கநாயகி சமரசப்படுத்தினாலும், சிறப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி குழு தலைவர்கள் உள்ளிட்ட 17 மாமன்ற கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அத்துடன், மாமன்ற வாயிலில் அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.