விருதுநகர்:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்கள் மீது பழி போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என விருதுநகர்மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேல் உள்ளோர் நான்கு லட்சம் பேர் உள்ளனர். ஆனால், தற்போதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 750 பேருக்கு மட்டுமே தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்கள் மீது பழிபோடுகிறார். இது ஏற்புடையதல்ல. மத்திய அரசு, மாநிலங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், இதே நிலை நீடித்தால், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடவே பல ஆண்டுகள் ஆகிவிடும் எனராகுல் காந்தி கூறியதை சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர்,‘‘தடுப்பூசி போடும் செயல்திறனை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றார்.