tamilnadu

img

ஆண்டுக்கணக்கில் பட்டா வழங்காமல் ஏழை, எளிய மக்களை அலைக்கழிப்பதா அரசு அதிகாரிகளுக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

ஆண்டுக்கணக்கில் பட்டா வழங்காமல் ஏழை, எளிய மக்களை அலைக்கழிப்பதா?  அரசு அதிகாரிகளுக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

கரூர், ஜுன் 7-  கரூர் வட்டத்திற்கு உட்பட்ட கரூர், ஆண்டாங்கோவில், வெள்ளியணை, வெங்கமேடு, பஞ்சமா தேவி, தாளப்பட்டி மற்றும் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர், மண்மங்கலம் மின்னம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் கட்டுமானம், டெக்ஸ்டைல்ஸ், விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாகவும், வாடகை வீட்டிலும் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடியிருப்பதற்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து பல ஆண்டுகளாக கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை மனுவை வழங்கி வருகின்றனர்.  கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலமாக விசாரணை முடிந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்காலாம் என கோரிக்கை மனு கொடுத்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்க கரூர், மண்மங்கலம் வட்டாட்சியர்கள், கரூர் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.  உடனடியாக அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமையன்று கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர், மண்மங்கலம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனுவை வழங்கினர்.  மேலும், இலவச வீட்டு மனைப் பட்டா கோரி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்  பயனாளிகளுக்கு விரைந்து  இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து, கரூர் வட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு ஆண்டுக் கணக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்காமல் அவர்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்க கரூர், மண்மங்கலம் ஆகிய வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி கரூர் மாவட்ட கட்டுமான சங்கத்தின் சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம். சுப்பிரமணியன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப. சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.  முன்னதாக, கோரிக்கை மனு வழங்குவதற்கு கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம். சுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.வாசுகி, எஸ்.அகிலா, சா.வித்யா, சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.