tamilnadu

img

கோலார் தங்கச் சுரங்க தொழிலாளர்களின் தலைவர் தோழர் வாசன் நினைவுதினம்

கோலார் தங்கச் சுரங்கம், அக்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோலார் தங்கச் சுரங்கத்தில், அமரர் தோழர் கே.எஸ். வாசன் அவர்களின் 43ஆவது நினைவு தினம் நெகிழ்ச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தில்  1880களில் சுரங்கப்பணிகள் தொடங்கப்பட்டபோதிலும், 1940 வரையிலும் அங்கே வேலைசெய்த தொழிலாளர்களுக்கு முறையான சங்கம் என்று எதுவும் கிடையாது. தொழிலாளர்களுக்கு முறையான ஊதியங்கள் மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், பணி நிலைமைகளும் எவ்விதமான பாதுகாப்புமின்றி மிகவும் மோசமாக இருந்தன. ஒருகட்டத்தில் அவர்கள் கைதிகள் போலவே நடத்தப்பட்டார்கள். கோலார் தங்கச் சுரங்கத்தில் சங்கம் கட்டும் பணிக்காக, தோழர் வஜ்ரவேல் செட்டி, தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் கே.எஸ். வாசன் மற்றும் வி.எம்.கோவிந்தன் ஆகியோரை வரவழைத்தார். தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் கே.எஸ். வாசனை அனுப்பி, தோழர் வி.எம்.கோவிந்தனுக்கு வழிகாட்டச் சொன்னார். இவர்கள் அனைவரும் இணைந்து நின்று 1946இல் தொழிற்சங்க இயக்கத்தை கட்டி எழுப்பி, கோரிக்கைகளை உருவாக்கி, போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சுமார் 77 நாட்கள் வரலாறு படைத்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று, வெற்றி பெற்றது. போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் வென்றெடுக்கப்பட்டன.

இதனை நிர்வாகத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தோழர் வாசனைக் கொல்வதற்கு குண்டர்களை அனுப்பி ஏற்பாடு செய்தது. அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அந்த சமயத்தில் அங்கே இருந்த தோழர் மாதவன், அவர் மீதான தாக்குதல்களைத் தான் ஏற்று, வாசனைக் காப்பாற்றினார். சம்பவத்தை அறிந்த தொழிலாளர்கள் கொலை செயலுக்கு எதிராக வெகுண்டெழுந்து அணிதிரண்டனர். கொலை பாதகச் செயல்களில் ஈடுபட்ட குண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என்று போராடினர். இவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு இளம் தோழர்கள் கொல்லப்பட்டார்கள். தோழர் வாசனின் பணிகள் தொடர்ந்தன. அவர் கோலார் தங்கச் சுரங்க தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரானார். தலைவர் வேறு யாருமில்லை. அப்போது மைசூர் மாநில முதல்வராக இருந்த கே.சி.ரெட்டி அவர்கள்தான். 1952 இல் கோலார் தங்க சுரங்கத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினரானார். 1956இல் கோலார் தங்க சுரங்கம் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு தோழர் வாசன் முக்கிய பங்களிப்பினைச் செய்திட்டார். தோழர் வாசன், தன்னுடைய 24ஆவது வயதில் கோலார் வந்தார். அதிலிருந்து 1979 அக்டோபர் 14 அன்று இறக்கும்வரையிலும்  அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் உற்ற தோழனாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.   அவருடைய நினைவுதினம் அக்டோபர் 14 அன்று நெகிழ்ச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.