பயிற்சி மையங்கள் கலகலக்கத் தொடங்கிவிட்டன. புதிய மையங்கள் தொடங்குவதற்கான விளம்பரங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்திய ரயில்வேயில 32 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்ற செய்திதான் இந்த நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. இதேபோன்றதொரு அறிவிக்கை 2019 ஆம் ஆண்டில் வெளியானபோது சுமார் 1 கோடியே 26 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தேர்வு நடத்துவது தொடர்பாக ரயில்வே ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும்போதே கொரோனா பாதிப்பு வந்தது. தேர்வுகளை நடத்தி, அடுத்தடுத்த கட்டங்களை நடத்தி முடிக்கையில் 2023 ஆம் ஆண்டே ஆகிவிட்டது. பலருக்கும் வேலைக்கான ஆணை கிடைக்க 2024 ஆம் ஆண்டும் ஆகிவிட்டது. வந்துவிட்டது அறிவிக்கை தற்போது மீண்டும் 32 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியிருக்கிறது. கடந்த முறையை விட இப்போதும் கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஏற்பட்டதைப் போன்ற தாமதம் இந்த முறை ஆகிவிடக்கூடாது என்று தேர்வர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்று நிர்ணயித்திருந்தாலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பிப்பார்கள் என்பதே யதார்த்தமான நிலவரமாகும். அந்த அளவுக்கு வேலையின்மைப் பிரச்சனை வாலிபர்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. படிப்புக்கேற்ற வேலை என்பது கனவாகவே இருந்து வருகிறது. சாதகமாக மாறும் அறிவியல் சமீப காலங்களில், கல்லூரிகளில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. சில கல்லூரிகளில் இந்தத் துறைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஆய்வுகளின் எண்ணிக்கையும் பெரிய அளவில சரிந்துவிட்டன. இந்தப் பாடங்களுக்கும், வேலைக்கு செல்வதற்கும் தொடர்பில்லை என்று பலரும் கருதுவதே இதற்குக் காரணமாக உள்ளது.
இந்நிலையில்தான் ரயில்வேயின் இந்த அறிவிக்கை வந்திருக்கிறது. இதில் தேர்வுக்கான பாடங்களை இப்படிப் பிரித்திருக்கிறார்கள். மொத்தமுள்ள 100 வினாக்களில் பொது அறிவியலில் இருந்து 25 மற்றும் கணிதத்தில் இருந்து 25 என்று வினாக்கள் இருக்கும் என்று அந்த அறிவிக்கை சொல்கிறது. பத்தாம் வகுப்புத் தரத்தில்தான் வினாக்களைக் கேட்பார்கள் என்றாலும் தொடர்ந்து அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்து வந்தவர்களுக்கு இது சாதகமானதாகவே அமையும். பத்தாம் வகுப்புக்கு பிறகு, அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படிக்காதவர்கள் பெரும் இடைவெளி விழுந்திருப்பதை உணர்வார்கள். ஆனால், தேர்வுக்கு இன்னும் காலம் உள்ளது. தயாரிப்புக்கு நிறைய நேரம் கிடைக்கப் போகிறது. விண்ணப்பத்திற்கான காலமே இறுதித்தேதி, கட்டணத்திற்கான தேதி மற்றும் விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான வாய்ப்பு என்று மார்ச் மாதம் வரையில் ஓடிவிடும். அதன்பின்னர்தான் தேர்வுகளை நடத்துவதற்கான வேலைகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கும். குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது பிடிக்கும். பொது அறிவுப்பிரிவில் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் வரும் என்று அறிவிக்கை கூறுகிறது. 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு இப்போதுள்ள சமச்சீர் புத்தகங்களும், மத்திய கல்வி வாரியத்தின் புத்தகங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகத்தான் உள்ளன. இல்லாத பாடங்களை வழிகாட்டி நூல்கள் வாயிலாகப் படித்துக் கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. சில மாதிரித் தேர்வுகளை ஆன்லைனில் எழுதிப் பார்த்துக் கொள்வது நல்லது. தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு. சரியான விடைகளுக்குக் கிடைத்த மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாடு தழுவிய அளவில் நடைபெறும் பெரும்பாலான தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில்தான் வினாத்தாள்கள் இருக்கும். ரயில்வே தேர்வில் தமிழ் மொழியிலும் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருந்தவர்களும் இதில் கவனம் செலுத்தலாம். உடல்தகுதித் தேர்வு தற்போது வெளியாகியுள்ள அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள காலிப் பணியிடங்கள் தொழில்நுட்பப் பிரிவுகளைச் சேர்ந்ததாகும். உடல் ரீதியாகவும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்பதால் உடல் தகுதித் தேர்வும் நடத்தப்படும். ஆன்லைனில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தத் தேர்விற்காக அழைக்கப்படுவார்கள். ஆண் தேர்வர்கள் 35 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு இரண்டு நிமிடங்களில் 100 மீட்டர் தொலைவைக் கடக்க வேண்டும். மேலும் 1000 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளில் ஓடிக் கடக்க வேண்டும். பெண் தேர்வர்கள் 20 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு இரண்டு நிமிடங்களில் 100 மீட்டர் தொலைவைக் கடக்க வேண்டும். மேலும் 1000 மீட்டர் தொலைவை 5 நிமிடங்கள் மற்றும் 40 வினாடிகளில் ஓடிக்கடக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த உடல்தகுதித் தேர்விலிருந்து விலக்கு உண்டு.
இதற்கு முன்பாக நடைபெற்ற தேர்வுகளில் உடல்தகுதித் தேர்வுகளில் ஓட முடியாமல் போனவர்கள் உள்ளனர். சிறிது காலம் உடற்பயிற்சி செய்து, ஓடிப் பயிற்சி எடுத்திருந்தார்கள் என்றாலே போதுமானதாகும். தீவிரமான தயாரிப்பில் உள்ளவர்கள் உடல் ரீதியான பயிற்சியையும் இப்போதே மேற்கொள்வது நல்லது. சான்றிதழ் சரிபார்ப்பு சான்றிதழ் பரிசோதனை வரையில் சென்று வாய்ப்புகளை இழந்தவர்கள் உண்டு. என்னென்ன சான்றிதழ்கள் தேவை என்பதை அறிவிக்கை தெளிவாகச் சொல்கிறது. சாதிச் சான்றிதழ்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட வடிவத்திலான சான்றிதழ்கள் வாங்க வேண்டியுள்ளது. அறிவிக்கையில் உள்ள மாதிரியை எடுத்து அதில் பெற வேண்டும். விண்ணப்பிக்கும் காலத்தில் பெறப்பட்டதாக சான்றிதழ்கள் இருப்பது நல்லது. இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர்(ஈடபிள்யூஎஸ்) ஆகியோருக்கான சான்றிதழ்களைப் பெற, வருமானச் சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான கடைசித் தேதிக்காகக் காத்திராமல் இப்போதே தொடங்குவது சுமுகமான நிறைவைத் தரும். ஒருங்கிணைந்த தயாரிப்பு வங்கித் தேர்வுகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்.எஸ்.சி) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) ஆகிய அனைத்தும் 2025 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு விட்டன. ரயில்வே தேர்வுக்குப் படிப்பவர்கள் அதே நேரத்தில் இந்தத் தேர்வுகளுக்கும் தயாரிப்பை மேற்கொள்ளலாம். இவை அனைத்திலும் கணிதப்பாடம், நடப்பு நிகழ்வுகள், நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகியவை இடம் பெறும். பொது அறிவு, பொது அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவை எஸ்.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கும் பெரிய அளவில் உதவும். ஒருங்கிணைந்த தயாரிப்பாகத் தேர்வர்கள் மாற்றிக் கொள்வதே இந்த ஆண்டு நடைபெறும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் உத்தியே சிறந்தது.