இடைத்தேர்தல் பெரும்பான்மையான இடங்களில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி
திருவனந்தபுரம், பிப். 25 - கேரளத்தில் 30 உள்ளாட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) 17 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 12 இடங்களையும் கைப்பற்றின. திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு வார்டு (ஸ்ரீவராஹம்), 3 நகராட்சி வார்டுகள், 2 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 24 சிற்றூராட்சி வார்டுகள் என மொத்தம் 13 மாவட்டங்களில் மொத்தம் 30 வார்டுகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. மாநகராட்சி திருவனந்தபுரம் மாநகராட்சி ஸ்ரீவராஹம் வார்டில், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் வி. ஹரிகுமார், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரை வீழ்த்தி பெற்றார். ஊராட்சி ஒன்றியம் கொல்லம் மாவட்டம், அஞ்சல் ஊராட்சி ஒன்றியத்தின் கொட்டரா வார்டில், இடது ஜனநாயக முன்னணியும், அஞ்சல் வார்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றன. நகராட்சிகள் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா நகராட்சியில் உள்ள கல்லுவத்துக்கல் மற்றும் பத்தனம்திட்டா நகராட்சியில் உள்ள கும்பழா வடக்கு ஆகிய வார்டுகளை இடது ஜனநாயக முன்னணி கைப்பற்றியது.
எர்ணாகுளம் முவத்துழா நகராட்சியின் கிழக்கு உயர்நிலைப் பள்ளி வார்டை மட்டுமே ஐக்கிய ஜனநாயக முன்னணி தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. பத்தனம்திட்டா நகராட்சியில் கும்பழா வடக்கு வார்டை, ஐக்கிய ஜனநாயக முன்னணியிடமிருந்து, இடது ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. ஊராட்சிகள் தேர்தல் நடைபெற்ற 24 சிற்றூராட்சி வார்டுகளில், இடது ஜனநாயக முன்னணி 13 வார்டுகளிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. எஸ்.டி.பி.ஐ ஒரு வார்டை பெற்றது. திருவனந்தபுரம் மாவட்டம் - பூவச்சல் ஊராட்சியின் புலிங்கோடு வார்டையும், இடுக்கி மாவட்டம் - வாத்திக்குடி ஊராட்சியின் தெய்வமேடு வார்டையும், எர்ணாகுளம் மாவட்டம் - பைங்கோட்டூர் ஊராட்சியின் பனங்கரா வார்டையும் ஐக்கிய ஜனநாயக முன்னணியிடமிருந்து, இடது ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. யுடிஎப் இடத்தில் எஸ்டிபிஐ கடந்தமுறை ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்றிருந்த, திருவனந்தபுரம் மாவட்டம்- பாங்கோடு ஊராட்சியின் புலிப்பாரா வார்டை, இம்முறை எஸ்டிபிஐ 674 வாக்குகளில் வென்றது. இடது ஜனநாயக முன்னணியின் டி.என். சீமா 448 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரசின் சபீனா கரீம் 148 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. பாஜகவின் பி.எஸ். அஜயகுமார் 39 வாக்குகள் பெற்றார். கடந்த தேர்தலில் இங்கு, ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வி. ஷீஜா 319 வாக்குகளையும், பாஜகவின் காஞ்ஞிநடா ரதீஷ் 49 வாக்குகளையும் பெற்றிருந்தனர். கடந்தமுறை 280 வாக்குகளைப் பெற்ற இடது ஜனநாயக முன்னணி, இந்த முறை 168 வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது. புலிப்பாராவில் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் கரீம் மரணம் அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்தது. இந்த ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மிகப்பெரிய தனிக் கட்சியாக இருந்தாலும், எஸ்டிபிஐ, வெல்பேர் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ளது. தற்போதைய கட்சி நிலை: எல்.டி.எப். - 8, யு.டி.எப் - 7, பிறர் - 4 என்பதாகும்.