மதுரை, பிப்.01-
மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேல மாசி வீதியில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான பழமையான கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று (திங்கள்கிழமை) காலையிலிருந்து நடந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் திடீரென கட்டடச் சுவர் பணியிலிருந்த தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய 3 பேரில் சந்திரன் மற்றும் ராமன் ஆகிய இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றும் உள்ளே சிக்கியுள்ள ஜெயராமன் என்பவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.