tamilnadu

img

பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு - சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

மதுரை, ஜன.04-

அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

“தடுப்பூசி அவசரமானது அவசியமானது" என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சுனுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பை நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது. 
ஒரு வாக்சினின் பாதுகாப்பு குறித்து தெளிவான உலக ஆய்வு வரையறை உள்ளது. இந்த அனுமதியும் அங்கீகாரமும் அந்த வரையறையின் படி அமையவில்லை. எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு அனுமதித்துள்ளது? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கோவாக்சினின் தோல்வியாக மட்டும் முடியாது. ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும். வெகுசன மக்கள் தடுப்பூசிகளையே புறக்கணிக்கத் துவங்கினால் அதன் விளைவு கொடிதினும் கொடிது. தவறான வாக்சின் அந்த வைரசையே பலம் பொருந்திய வீரியமானதாக மாற்றிவிடக் கூடாது. 
கூடவே இப்போதைய புதிய வீரிய வைரசுக்கும் இத்தடுப்பூசி பயன்படும் 110 சதவீத பாதுகாப்பு என்றெல்லாம் கூச்சலிடுவது இந்திய அறிவியல் உலகையே எள்ளி நகையாடச்செய்கின்றது. 

"தற்சார்பு, இந்திய தயாரிப்பு" சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு போலத்தான் இந்த அவசரகதி அங்கீகாரம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

;