மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வெள்ளியன்று (மார்ச் 22) விசிக தலைவர் தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு வருவதன் அடையாளமாக ‘இந்தியா’ கூட்டணி உருவாகி உள்ளது. இதில், கமல்ஹாசன் இணைந்திருப்பது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவரை, விசிக போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தோம்” என்றார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த திருமாவளவன்,, “கைது நடவடிக்கையை அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்பார்த்து காத்திருந்தார். அதனால்தான் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை பொருட்படுத்தவில்லை” என்றார். “இந்தியா அணியை உருவாக்கியதில் கெஜ்ரிவாலின் பங்கு முக்கியமானது” என்று குறிப்பிட்ட அவர், “தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருப்பது பாஜகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்தியா அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும். பாஜகவின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்” என்றார்.