tamilnadu

img

கலை - இலக்கிய ஆளுமைகளுக்கு விருதுகள்

தூத்துக்குடி,பிப். 13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2020- 21 ஆம்  ஆண்டுக்கான மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 11 அன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சைதை.ஜே வரவேற்புரை ஆற்றினார். வெண்புறா, ஜெய காந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை மாலை நிகழ்ச்சிக்கு வஉசி கல்லூரி முதல்வர் முனைவர் சோ. வீரபாகு  தலைமை வகித்தார். தமுஎகச மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதுரை  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு  தலைவருமான சு. வெங்கடேசன் எம்.பி., மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கி சிறப்புரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட தலைவர் கு.ராமசுப்பு நன்றி  கூறினார். இந்நிகழ்வுகளை தமுஎகச மாநில நிர்வாகி கள் லெட்சுமிகாந்தன், உதயசங்கர் ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினர்.

விருதுகள்

இவ்விழாவில் முற்போக்கு கலை இலக்கியத் திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது ரூ.1 லட்சம் பேராசிரியர் மார்க்சுக்கு வழங்கப்பட்டது. சிறந்த தொன்மை சார் நூலுக்கான கே.முத்தையா நினைவு விருது “வடசென்னை  வரலாறும் வாழ்வியலும்” நூலுக்காக‌ நிவேதிதா லூயிசுக்கும்; சிறந்த நாவல் நூலுக்கான‌ கே.பி.பாலச்சந்திரன் நினைவு விருது “உண்மைகள் பொய்கள் கற்பனைகள்” நூலுக்காக‌ அரிசங்கருக்கும்; சிறந்த விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்புக்கான‌ சு.சமுத்திரம் நினைவு விருது “அணங்கு” நூலுக்காக‌ அருண்பாண்டியன் மனோகரனுக்கும்; சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான‌ ரா.நாகசுந்தரம் நினைவு விருது “அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்” நூலுக்காக சுகுணா திவாகரனுக்கும்; சிறந்த கவிதை தொகுப்புக்கான‌ வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள் ஜெகந்நாதன் நினைவு விருது “பியானோவின் நறும்புகை” நூலுக்காக நிலா கண்ணனுக்கும்; சிறந்த சிறுகதைக்கான‌ அகிலா சேதுராமன் நினைவு விருது “திமிரி” நூலுக்காக கிருத்திகாவுக்கும்; சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்க னார் விருது

“யாத்வஷேம்” “நேமி சந்திரா” ஆகிய நூலுக்காக தமிழில் மொழிபெயர்த்த கே.நல்லதம்பிக்கும்; சிறந்த மொழி வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது “செந்தமிழ் நூல்களில் இணையவழிப் பெயர்கள்” நூலுக்காக முனைவர் சுபாஷ் சந்திரபோசுக்கும்; சிறந்த குழந்தைகள் இலக்கிய நூலுக்கான இராஜபாளையம் மணிமேகலை மன்றம் கோதண்டம் விருது “மந்திர கிளுகிளுப்பை” நூலுக்காக சரிதாவுக்கும்; சிறந்த குறும்படத்திற்கான‌ ராமச்சந்திரன் நினைவு விருது “தித்திப்பு” படத்திற்காக‌ திருஞானத்திற்கும்; சிறந்த ஆவணப்படத்திற்கான என்.பி.நல்லசிவம் ரத்தினம் நினைவு விருது “லேண்ட் ஆப் பீஃப்” ஆவணப்படத்திற்காக மதன்குமாருக்கும்; அமரர் மூசி கருப்பையா பாரதி, ஆனந்த சரஸ்வதி அம்மாள்  நாட்டுப்புற கலைச்சுடர் விருது பி.முத்துச்சந்தி ரனுக்கும்; மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது வைகறை கோவிந்தனுக்கும்; முனைவர் பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது மங்கைக்கும்; மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது பா.ஜீவசுந்த ரிக்கும் என  16 விருதுகள் மற்றும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கலை மாலை நிகழ்ச்சியில் தவில் விநாயகத்தின் இசை முழங்க, புதுச்சேரி உமா, திருவுடையான் தண்டபாணி, முத்துச்சிப்பி தாமோதரன் ஆகியோரின் நாட்டுப்புற பாடல்கள்,  முத்து சந்திரனின் தோல்பாவை கூத்து, நாடகங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரவேற்பு குழு துணைத் தலைவர் நா.வெங்கடேசன், செயலர்  சுப்ரமணியன், துணைச் செயலாளர் விக்னேஷ் வரன், பொருளாளர் சிவனாகரன் உள்ளிட்ட வரவேற்புக்குழுவினர் செய்திருந்தனர்.