tamilnadu

img

வஉசி துறைமுகத்தில் சிறப்பாக செயல்பட்ட உபயோகிப்பாளர்களுக்கு விருது!

தூத்துக்குடி, ஏப். 6- தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட உபயோகிப்பாளர் களுக்கு விருது வழங்கப்பட்டது.  கடற்சார் வர்த்தகத்தின் தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக திகழும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பாக சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் சுதன்ஷ் பந்த், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2021-2022-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமசந்திரன், மற்றும் துணை தலைவர் பிமல்குமார் ஜா ஆகியோர் முன்னிலையில் விருதுகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில் “இச்சாதனை புரிந்த அனைத்து உபயோகிப்பாளர்கள், வர்த்தக குழுமத்தினர், அனைவரையும் பாராட்டினார். மேலும் ஸ்பீட்ஸ் (SPEEDZ) திட்டத்தின் மூலம் துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைய பெறுவதற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் எடுத்து வரும் முயற்சியை பாராட்டியதோடு, வெளிதுறைமுக திட்டத்தினை செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.  

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் மேலும் வலுப்பெற, அனைத்து துறைமுகங்களின் இணைப்பு மிகவும் இன்றியமையாதது. உள்கட்டமைப்பு வசதிகளில் ஏதும் குறைபாடுகள் இருந்தால், பாரத பிரதமர் ‘கதி சக்தி’ திட்டத்தின்கீழ் அதனை அதற்குரிய காலத்தில் நேர்த்தியாக செய்து தளவாட செலவு 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.  கடந்த நிதியாண்டு 2022-23 வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 38.04 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் அவர் பாராட்டினார். விழாவிற்கு தலைமை வகித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் கூறுகையில் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு தேவையான சரக்கு கையாளும் வசதிகள், தேவையான உள்கட்டமைப்புகளை அடையாளம் கண்டு அதனை செயல்படுத்துவதாக உறுதி அளித்தார். விழாவில் துறைமுக ஆணையம் போக்குவரத்து மேலாளர் ஆர். பிரபாகர், வரவேற்றுப் பேசினார். செயலர் கிரி ராஜ் ரத்தோடு, நன்றி கூறினார். விழாவில் இந்தியாவிலுள்ள பெரிய துறைமுக உபயோகிப்பாளர்களின் முக்கிய துறையை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.