tamilnadu

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) 

ஒரு  புது வகை கையுறையை  வடிவமைத்துள்ளனர் பார்ட்லெட் மற்றும் குழுவினர். இந்தக் கையுறையில்  ஒவ்வொரு  விரல் நுனியிலும் உறிஞ்சக்கூடிய சக்கர் எனும் அமைப்பு உள்ளது. ஆக்டோபஸ் கைகளிலுள்ள அமைப்பிலிருந்து இந்த வடிவத்திற்கான சிந்தனை தோன்றியதாம்.

இந்த உறிஞ்சும் அமைப்பு. ராஸ்பெரி பழ அளவிலான ரப்பர் கூம்பு போன்றது.அதன் மேல் விரிந்துகொடுக்கும் ரப்பர் பரப்பு உள்ளது. இதனுள்ளிருக்கும் காற்றை வெளியேற்றும்போது நுனிப்பகுதி  ஒரு கிண்ணம் போல் வளைந்து வெளித் தளங்கள் மேல் ஒட்டிக் கொள்கிறது.மீண்டும் காற்றை உள் செலுத்தும்போது நுனிப்பகுதி விரிந்து ஒட்டிக்கொண்டிருக்கும் பரப்பிலிருந்து விலகிக்கொள்கிறது.கையுறையின் விரல்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை ஒரு  ஒரு பரப்பின் அருகில் வரும்போது ஒட்டும் முறைக்கு மாறும் வகையில் சுவிட்சை இயக்குகின்றன.  இந்த ஆய்வாளர்கள்    தண்ணீருக்கு அடியில் உள்ள பொருட்களை எடுக்க இவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளார்கள்.ஒவ்வொரு உறிஞ்சும் அமைப்பும்  வெளியில் ஒரு கிலோ எடையுள்ள பொருட்களையும் தண்ணீருக்கு அடியில் அதைவிட கூடுதல் எடைப் பொருட்களையும் எடுக்க முடியும்.

ஆக்டோபஸ்கள் தங்களுடைய எட்டு கைகளிலுமுள்ள ஆயிரக்கணக்கான சக்கர்களை இயக்க முடியும்.இதன் மூலம் கடலின் அடிப்பரப்பை ஆய்ந்து தங்கள் இரைகளை பிடிக்கின்றன.அதற்கு  தொடு உணர்விகள் மட்டுமல்ல அதிலுள்ள வேதிப்பொருட்கள் மூலம் தங்கள் சுற்றுப்புறத்தை ‘ருசி’ பார்க்கின்றன. ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ள கையுறையில் இந்த அம்சம் இல்லை.ஆனால் அதையும் சேர்க்க முடியுமா என்கிற வாய்ப்பையும் சிந்திக்கிறார்களாம்.அதன் மூலம் குறிப்பிட்ட பொருட்களில் மட்டும் ஒட்டிக்கொள்ள இயலும்.

2 )

பசுமைக் குடில் வாயுக்களில் கார்பன் டை ஆக்சைடு மிகவும் ஆபத்தான ஒன்று.அதை காற்று மண்டலத்திலிருந்து நேரடியாக பிரித்தெடுக்கும் முறையில்  அதிகமான நிலப்பரப்பும் அதிக ஆற்றலையும் செலவிட வேண்டியதிருக்கும். மேலும் இத்தகைய அமைப்புகள் நிறுவப்படும் இடத்திலுள்ள குடியிருப்போர் அதை விரும்புவதில்லை.இப்போது ரயில் தொடர் வண்டிகள் மூலம் கார்பன் டை ஆக்ஸைடை பிரித்தெடுக்கும் முறையை சிஓ2 எனும் ஆய்வகத்தின் நிறுவனர் இ .பக்மன் தலைமையில் ஒரு ஆய்வுக்கு குழு கண்டறிந்துள்ளது. இது ஜுலை மாத ‘ஜு ல்’(joul) இதழில் வெளிவந்துள்ளது.

ரயில் தொடர் வண்டி பயணிக்கும்போது அதிலுள்ள காற்றுக் குழாய்கள் மூலம் கார்பன்டை ஆக்ஸைடு உறிஞ்சப்பட்டு ஒரு திரவ கலனில் சேமிக்கப்படுகிறது. அது நிரம்பியதும் குழாய் மூடப்படும்.வண்டி நின்றதும் கார்பன்டைஆக்ஸைட் வெளியேற்றப்படும். இதற்கு மிகுந்த ஆற்றல் கொண்ட விசிறிகள் தேவையில்லை.ஏற்கனவே உள்ள இருப்புப் பாதையையே பயன்படுத்துவதால் புதிய கட்டுமானங்கள் தேவை இல்லை.இந்த ஆய்வாளர்களின் தொடர்வண்டி ஒரு வருடத்திற்கு 6000 டன் கார்பன்டை ஆக்ஸைடை நீக்கும்.ஒரு டன் னை வெளியேற்ற 50 டாலர்களுக்கும் குறைவாகவே செலவாவதால் வணிக ரீதியாக இலாபகரமானதும் செயல்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

3 ) 

விலங்குகளை குளிர் ரத்த ஓட்டம் கொண்டவை, வெப்ப ரத்த ஓட்டம் கொண்டவை என இருவகையாக பிரிக்கின்றனர். முதல் வகை விலங்குகள் சுற்று சூழல் தட்ப வெப்பத்திற்கு ஏற்றவாறு தங்கள் உடல் வெப்பத்தைக் கொண்டவை. இரண்டாவது வகை எப்போதும் ஒரே சீரான வெப்பத்தைக் கொண்டி ருப்பவை. பறவைகளும் பாலூட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவை.இவை துருவப் பகுதியிலிருந்து நில நடுக்கோட்டுப் பகுதி வரை பல்வேறு வித வெப்ப தட்பங்களிலும் வாழக் கூடியவை. பாலூட்டிகள் எப்போது குளிர் ரத்த ஓட்டத்திலிருந்து வெப்ப ஓட்டத்திற்கு மாறின என்பதை அவற்றின் காது அமைப்பிலிருந்து அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாலூட்டிகளின் உள்  காதில் உள்ள அரைவட்ட குழாய்கள் சிறியவையாகயும் மற்ற விலங்கினங்களை விட வட்ட வடிவமாகவும்  உள்ளன. 

வெப்ப ரத்த ஓட்ட விலங்குகளின் உள்  காதிலிருக்கும் திரவம் பிசுபிசுப்பு குறைவாக உள்ளது. அதை ஈடு செய்ய குழாய்கள் சுருங்கியிருக்கலாம். இதற்கு மாறாக மீன்களுக்கு அதன் உடல் அளவோடு ஒப்பிடும்போது இவை பெரிதாக இருக்கின்றன. ஆகவே ஒரு விலங்கின் காதுகளுக்கும் அவற்றின் உடல் வெப்ப வகைக்கும் தொடர்பு இருக்கலாம் என இந்த ஆய்வாளர்கள் முன்மொழிந்தனர். 

மீன்கள், ஊர்வன பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் 341 விதமான பிராணிகளின் உடல் வெப்பத்தையும் உள் காது அமைப்பையும் ஆய்வு செய்தனர். காதுகளின் அளவு மாறுபாட்டிற்கு ஏற்ப அவற்றின் உடல் வெப்பமும் மாறுபடுவது கண்டறியப்பட்டது. இவற்றை பாலூட்டிகளின் மறைந்து விட்ட முன்னோர்களின் படிம வடிவில் இருக்கும் உள் காதுகளோடு  ஒப்பிட்டனர். 233 மில்லியன் வருடங்களுக்கு முன்பு காதுகளின் அமைப்பு திடீர் என மாறுபாட்டிருப்பது தெரிய வந்தது.  இந்தக் காலம் பல புவியியல் மாற்றங்கள் ஏற்பட்ட காலமாகும். நிலையில்லாத தட்ப வெப்ப காலம் என்றழைக்கப்படும் (Carnian Pluvial Episode) இந்தக் காலத்தில் பூ மண்டலத்தின் வெப்ப நிலை ஏராளமான மாற்றங்களுக்கு ஆட்பட்டது.மிகுந்த ஈரப்பதம் கொண்டிருந்தது. இந்தக் காலத்திற்கு முன்பிருந்த காலமான பெரும் அழிவிலிருந்து முதுகெலும்பு வகை விலங்குகள் தப்பி ழைத்த பிறகு இந்த வெப்ப நிலை ஏற்பட்டது.இப்போதுதான் டைனோசார்களும் பாலூட்டிகளும் தோன்றத் தொடங்கியிருந்தன.

விலங்குகளில் உள் வெப்ப சமநிலையானது வெளிப்புற நிலைமைகளுக்கு ஏற்ப உடல் வெப்பம் மாறாமல் சுயேச்சையாக பாதுகாக்கிறது.எனவே பரிணாமம் இந்த இரண்டுவகை விலங்குகளுக்கும் கடுமையான சூழல்களில் பிழைத்திருக்கும் இப்படிப்பட்ட பாதுகாப்புகளை வழங்கியிருக்கும். எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் புருஸட் அழிந்துபட்ட இனங்கள்  எவ்வாறு நகர்ந்தன,  எவ்வாறு ஒலிகளை கேட்டன என்பதை ஊகிக்க  காது வடிவங்களில் பல ஆண்டு காலம் ஆய்வு செய்பவர். காதுகளின் வடிவங்களிலிருந்து அவற்றின் வளர்சிதை மாற்றங்களையும் உடல் வெப்ப வகையையும் கண்டறியலாம் என்பது குறித்து தான் சிந்திக்கவில்லை என்று ஆச்சரியப்படுகிறார்.ஆனால் ரத்த ஓட்ட வகை தோன்றியதை முடிவு செய்ய காதுகளின் வடிவங்களை மட்டும் போதுமானவை அல்ல என்கிறார்