tamilnadu

img

புல்டோசர்களுக்கு அஞ்சாத டிராக்டர்கள்

ஏகேஜி நகர்/திருச்சூர், டிச.15-    தேசத்தில் நிகழ்ந்துள்ள விவசாய மாற்றங்களையும். உழவர் பெருங்குடி மக்களின் வாழ்வியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் விளக்கும் சிறப்பான கண்காட்சி திருச்சூர் ஏகேஜி நகரில் (தேக்கின்காடு திடல்) அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் நாள் தோறும் பார்வையிடும் இக்கண்காட்சி இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்ததும் விவசாயத்திலும் அன்றாட வாழ்விலும் மக்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் நம்மை வரவேற்கின்றன. வழக்கொழிந்துபோன நீர் இறைவைக்கருவி, மீன் குடுவை, குடைப்பனை ஓலையில் செய்யப்பட்ட பழங்காலத்து தலைக்குடைகள், பல்வேறு வகையான அரிவாள், மண்ணெண்ணெய் விளக்குகள் என ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

அடுத்ததாக கண்காட்சியை ஆக்கிரமித்திருப்பது வீரம் செறிந்த விவசாயிகளின் தில்லி முற்றுகைப் போராட்ட புகைப்படக்  காட்சிகள். 2020 செப்டம்பர் 17 ஆம் தேதி இந்திய நாடாளு மன்றத்தின் மக்களவையிலும் செப்டம்பர் 20 ஆம் தேதி மாநிலங்களவையிலும் நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் மசோதாக்களை மோடி அரசு நிறைவேற்றியது. அதற்கு ஒருவாரம் முன்பே விவசாயிகள் தில்லி சாலைகளை முற்றுகையிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்ட நெருப்பை நெருங்க முடியாத  மோடி அரசு இறுதியாக 2021 டிசம்பர் 8 ஆம் தேதி நாடாளு மன்றத்தில் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து 2021 டிசம்பர் 9இல் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கிசான் மோர்ச்சா மஞ்ச் (எஸ்கேஎம்) தலைவர்கள் அறிவித்தனர். டிசம்பர் 11 ஆம் தேதி வெற்றி நாளாக நாடு முழுவதும் விவசாயிகள் கொண்டாடினர். அண்மைக்காலத்தின் இதிகாசம்போன்ற இந்த போராட்ட வரலாறை அரிய புகைப்படக் காட்சியாக்கி இருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கொள்கைகளுக்கு மாற்றாக 1957 இல் இஎம்எஸ் அரசு முன்வைத்த மாற்றுக் கொள்கை களும் நிலவுடமையில் அது ஏற்படுத்திய தாக்கமும், கேரள சமூகத்தில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களும் பெரும் ஆவணங் களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவிய விவசாயிகளின் ரத்தம் தோய்ந்த போராட்ட வரலாறுகள், அதுபோல் நாடு முழுவதும் நடந்த நிலத்துக்கான போராட்டங்களை பறைசாற்றும் புகைப்படக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.  

-திருச்சூரில் இருந்து சி.முருகேசன்