எப்போதும் உன்பாட்டு! இயக்கத்தின் உயிர் மெட்டு!!
இடது இயக்கத்தின் தங்கக் குரலே.... எங்கள் இதய சிம்மாசனத்தின் பாட்டுக் குயிலே...
உன் குரலின் ரீங்காரம் இசைக்கும் வண்டுகளோ, பயமுறுத்தும் குண்டுகளோ என குதூகலித்து கிடப்போமே...
இதுவரை காற்றில் கரைந்தது உன் குரல்... இப்போது நீயே கரைந்து போய் எங்களை உறைந்து போக வைத்தாயே...
ஊரடங்கும் சாமத்துல நீ முழிச்சு இருந்து பாடுவியே... கரிசல் மண்ணு பாடகனே... மக்களை விழிக்கவச்ச சாதகனே...
ஐயோ துயரமே! எங்கள் வீணையின் நரம்பு அறுந்து போச்சுதே! சொக்கக் குரல் ஒன்னு சொக்கிப் போச்சுதே!
திகட்டாத உன் குரலில் திக்கெட்டும் உன் பாட்டு, இப்போதும் கேட்கிறது இதயம் தான் கணக்கிறது. போராளிப் பாடகனே, போய் விட்டாயா? தீராத சோகத்தில் எங்களை திகைக்க வைத்தாயா? விழுந்து கிடக்கின்ற வீணையின் நாதமே, எங்களுக்காக எழுந்து ஒரு பாட்டு பாடிவிட்டுப் போவாயா?
தாங்காத துயரத்தில் தவித்து கிடக்கின்றோம். அழுதாலும் எழ மாட்டாய் என தெரியாமல் தவிக்கின்றோம்... கரிசல் குயிலே! எப்போதும் உன் பாட்டு, எங்கள் இயக்கத்தின் உயிர் மெட்டு. இனி எங்களின் விடுதலைக் கானமாய் காலமெல்லாம் நீ இருப்பாய்...காற்றெல்லாம் கலந்திருப்பாய்.
எஸ்.கவிவர்மன்