இயற்கைப் பேரிடர் நிவாரணத்திலும் தமிழகத்தை பழிவாங்கிய மோடி அரசு!
இயற்கைப் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் கூட, வேண்டிய மாநிலம், வேண்டாத மாநிலங்கள் என்று ஒன்றிய பாஜக அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். வேலூருக்கு வியாழனன்று வருகை தந்த பெ. சண்முகம் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
கடமை தவறிய பாஜக அரசு
ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா, ஒடிசா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு, இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி வழங்கிய ஒன்றிய பாஜக அரசு, பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் ஓரவஞ்சனை செய்திருக்கிறது. பெஞ்சால் புயலால் நூற்றுக்கணக் கான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, வரலாற்றில் இல்லாத அளவில் விழுப்புரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எதிர்பாராத புயல் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகும்போது அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒன்றிய அரசின்கடமை. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 37 ஆயிரம் கோடி புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதன் அடிப்படை யில், ஒன்றிய அரசின் குழுவும் பார்வை யிட்டு ஆய்வு செய்து பிரதமரிடம் அறிக்கையை கொடுத்துள்ளது. இந்த குழு என்ன அறிக்கை வழங்கியது? எவ்வளவு நிதி ஒதுக்குவார்கள்? என்று தெரியப்படுத்தவில்லை.
பழிவாங்கும் போக்கு மாறவில்லை
பேரிடர் பாதிப்பு என்று அறிவித்த தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச நிதி யை கூட ஒதுக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கு ஆகும். பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு இருப்பதையே இதுகாட்டுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசாங்கம் தனது சொந்த நிதியிலிருந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ. 500 கோடி நிவாரணமாக அறிவித்ததை வரவேற்கிறோம். இதுபோன்ற இயற்கை பேரிடர்களின் போது மாநில அரசால் மட்டுமே பாதிப்பை (அ) பேரழிவை எதிர்கொள்ள முடியாது. நடைமுறையில் இது சாத்தியமற்றது. எனவே தான், ஒன்றிய அரசாங் கத்தில் தனியாக இயற்கை பேரிடர் நிவாரண நிதியம் உருவாக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை இதுபோன்ற பாதிப்பின் போது தான் பயன்படுத்த வேண்டும். இயற்கைப் பேரழிவில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது, வேண்டாத மாநி லங்களை ஒதுக்குவது, பழிவாங்கு வது போன்று மிக மோசமான நடை முறையில் ஒன்றிய பாஜக அரசு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிவாரண நிதியை உடனே வழங்குக! ‘
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’ என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் காலத்தில் மட்டுமல்ல, காலம் கடந்தும் உதவி செய்ய வில்லை. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசாங்கம் கோரிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரலாற்றைப் படிக்க வேண்டும்
மொழிக் கொள்கையில் யார் ஒருவரும் எந்த மொழியையும் விரும்பி கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், திணிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இத்தனை மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும்; இந்த மொழியை அவ சியம் கற்க வேண்டும் என்பதை ஏற்க வில்லை. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையைத் தான் மொழிக் கொள்கையாக ஏற்று தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்காத வரை இந்தி மொழியை திணிக்க மாட்டோம் என்று இந்திய நாடாளு மன்றம் உறுதிமொழி வழங்கியுள்ளது. பாஜக-வினருக்கு வரலாறு தெரிய வில்லை என்றால் தேடிப் படிக்க வேண்டும். மாறாக, இந்தி மொழியைக் கற்றால் தான் தேசியக் கொள்கையை ஏற்றால் தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நிதியை வழங்க மறுப்பது அடாவடித்தனம்
எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி என்பதை நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டில் முடிவுசெய்து அறிவித்த பின், பட்ஜெட்டில் ஒதுக்கியதையே வழங்க மாட்டோம் என்று கூறுவது அடாவடித்தனமானது. வட மாநிலங்களில் எத்தனை மொழிக் கொள்கை அமலில் உள்ளது. அங்கே மூன்று மொழிகளில் படிக்கிறார்கள்? இந்தியை தவிர வேறு எதுவும் அங்கு சொல்லித் தரப்பட வில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழோடு, ஆங்கிலம் என்ற பொது வான தொடர்பு மொழியும் சொல்லித் தரப்படுகிறது. ஆகவே, இந்தித் திணிப்பு என்பது, தமிழகத்திற்கு எதி ரான நிலையை எடுக்க பழிவாங்கும் உள்நோக்கத்தோடு செய்யப்படும் ஒன்றிய அரசின் செயலாகும். எனவே, உடனடியாக தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 2152 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.