tamilnadu

தமிழ்ப் பல்கலை.,யில் அரிய நூல்களை கணினிப் படியாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு

தஞ்சாவூர், பிப்.20- தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறை சார்பில், செவ்வாயன்று உ.வே.சாமிநாதய்யரின், 168 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித்  தமிழ்த்துறை, அனைத்துலகத் தமிழர் மேம்பாடுப் பேரவை, மலேசியத் தமிழாய்வு நிறுவனம் இணைந்து நடத்தும் ‘‘அச்சேறாத தமிழ் ஓலைச் சுவடிகளும் பண்பாடும்’’ என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.  இதில், துணைவேந்தர் பேசியதாவது,  ‘‘தமிழ்ப் பல்கலைக்கழக சுவடித் துறையின் நோக்கமானது, உலகெங்கிலுமுள்ள தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பாதுகாப்பது, பதிப்பிப்பது, வெளியிடுதல் மற்றும் சுவடிகளை மின்படியாக்கி ஆய்வுக்குரிய தரவுகளாக மாற்றப்படுதல் ஆகும்.  ‘‘கணிப்பொறிவழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள்’’ அட்டவணை என்ற பெயரில் தமிழில் ஐந்து தொகுதிகள், ஆங்கிலத்தில் ஐந்து தொகுதிகள் எனப் பத்துத் தொகுதிகளாக 21,973 ஓலைச்சுவடிகள் பற்றிய செய்திகள் வெளியிடப் பெற்றுள்ளன.

இதுவரை இத்துறையில் 68 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பகுதி 11 திட்டத்தின் கீழ் ஓலைச் சுவடித் துறையில் இருக்கின்ற தமிழ் இலக்கணம்,  இலக்கியம், கலை, பண்பாடு  தொடர்பான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் ஆகியவற்றை கணினிப் படியாக்கம் செய்யும் திட்டத்திற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து திட்டம் முடிவுற்றுள்ளது’’ என்றார்.  முன்னதாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க.முருகேசன் வரவேற்றார்.  கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தொடக்கவுரை ஆற்றினார். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முனைவர் மு.தனம் வாழ்த்துரை வழங்கினார்.  அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இணை ஒருங்கிணைப்பாளர், முனைவர் நல்லதம்பி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைத் தலைவர் முனைவர் மோ.கோ.கோவை மணி நன்றி கூறினார்.