tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உழவரைத் தேடி  வேளாண்மை நிகழ்ச்சி

பாபநாசம், மே 31-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோபுராஜ புரத்தில், உழவரைத் தேடி என்ற வேளாண்மை நிகழ்ச்சி நடை பெற்றது.  பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக் தலைமை வகித்தார். முன்னதாக, பாபநாசம் வட்டார  வேளாண்மை அலுவலர் நடராஜன் வரவேற்றார்.  ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் டாக்டர்  ராஜசேகரன், கால்நடை மருத்துவர் ஆனந்த குமார், மீன்வளத் துறை கிளைட்டஸ், வேளாண்மை பொறியி யல்துறை கண்ணன், வேளாண்மை வணிகத் துறை, வேளாண்மை அலுவலர் தாரா, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி, தோட்டக்  கலை உதவி அலுவலர் வரதராஜன், வேளாண்மை உதவி அலுவலர் சரவணன், சதீஸ் குமார் ஆகியோர் தங்களது துறை  சார்ந்து பேசினர். இதில் விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. விவ சாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கப் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் பகத்சிங், வட்டார தொழில் நுட்ப  மேலாளர் வெங்கடேசன், பயிர் அறுவடை பரிசோத னையாளர் நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.

மக்களுடன்  முதல்வர் முகாம் 

பாபநாசம், மே 31-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. முகாமில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹ்ரித்யா எஸ். விஜயன், பாபநாசம் தாசில்தார் பழனிவேல், பி.டி.ஓ க்கள் சிவகுமார், விஜயலட்சுமி, வருவாய்த் துறையினர், திமுக மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, சிறுபான்மையினர் நலம், மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, சமூக நலன், மகளிர் உரிமை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.

மினி லாரியில்  மணல் கடத்திய  இருவர் கைது

தஞ்சாவூர், மே 31- தஞ்சை அருகே மினி லாரியில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். தஞ்சை கூடலூர் வெண்ணாற்றங்கரை சுடுகாடு அருகே மணல் கடத்தல் நடந்து வருவதாக தஞ்சை தாலுகா காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்தனர். காவல்துறையினரைக் கண்டதும் மினிலாரியில் வந்த 4 பேர் தப்பியோடினர். இதில் 2 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர், மினி லாரியை சோதனை செய்த போது, அனுமதியின்றி மணல் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மினிலாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து தஞ்சையை அடுத்த கூடலூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்(39), ராஜேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மணல் கடத்திய  லாரி பறிமுதல்: ஒருவர் கைது

தஞ்சாவூர், மே.31-   தஞ்சை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் பிரியா, வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் வல்லம் காவல்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வல்லம் அருகே திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டதில் ஆறு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வல்லம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக லால்குடி அன்பில், மங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துறையூரில் அரசு கல்லூரி அமைக்கப்படும்: தமிழக அரசின் அறிவிப்புக்கு சிபிஎம் பாராட்டு

திருச்சிராப்பள்ளி, மே 31-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட இடைக்கமிட்டி செயலாளர் கூட்டம் சனிக்கிழமை அன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து, மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே, இருசக்கர வாகனம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்வது. துறையூரில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இடைக்கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிகாந்த் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா நன்றி கூறினார்.

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை  அங்கன்வாடி மையத்தில் சேர்க்கலாம்: ஆட்சியர் 

திருச்சிராப்பள்ளி, மே 31-  அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர்.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 1,850 குழந்தைகள் மையங்களில் சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையத்தில் முறைசாரா முன்பருவ கல்வி செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  மேலும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்ப டுத்தப்படுகின்றனர். எனவே பெற்றோர் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வருகிற ஜுன் மாதத்தில், குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அந்த சேவையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாலைப்பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் தீபக் சிவாச் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தார்.