தன்னுடைய கருத்தை மற்றவர் மேல் வலிந்து திணித்த சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டு தோழர் ஸ்டாலின் மீது வீசப்பட்டதுண்டு. நமது மார்க்சிய இயக்கம் பெற்ற அனுபவம் அதை நிரூபிக்கவில்லை. நமது தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து இந்தியாவில் புரட்சிகர மாற்றம் கொண்டுவருவது குறித்து அவரிடம் விவாதித்தனர். “எனக்கு இந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது பொதுவான மார்க்சிய-லெனினிய மற்றும் இயக்க இயல் கோட்பாடுகள்தான். அந்த பொதுவான புரிதலிலிருந்து நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறோம். அதை ஏற்றுக் கொள்வதோ திருத்துவதோ அல்லது ஏற்க மறுப்பதோ என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்”. இதுதான் ஸ்டாலின் நம் தலைவர்களுக்கு கொடுத்த ஆலோசனை. எல்லாம் தெரிந்த மாதிரி ஸ்டாலின் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. மிகவும் தன்னடக்கத்துடன் பொறுமையாக செயல்பட்டார் என்று தோழர் பசவ புன்னையா தன் நினைவுக் குறிப்பு களில் எழுதியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் சோவியத் யூனியன் சில பின்னடைவுகளை சந்தித்தது. முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தவறுகளுக்காகவும், காலதாமதம் ஆனதற்கும் ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கூட தயங்கவில்லை. மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ளும் மனிதராக இருந்தார். ஒரு விவசாய பெண்மணி, “புல் வளர்கிற சப்தத் தைக்கூட அவரால் கேட்க முடியும்” என்றார். கமிட்டிக் கூட்டங்களில் அதிகம் பேசாமலேயே பொதுக்கருத்தை உருவாக்கும் திறன் கொண்டவராக இருந்தார் என்று எழுதுகிறார் ‘அன்னா’ எனும் அமெரிக்க பத்திரிகையாளர். சிறந்த மார்க்சிய - லெனினிய தத்துவ ஆசானாக விளங்கினார்.
- ஆர்.கோவிந்தராஜன்
2012 மார்ச் மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரையிலிருந்து...
இன்று (05-03-2024) தோழர் ஸ்டாலின் நினைவு நாள்