tamilnadu

பூ காய் கனி - வல்லம் தாஜுபால்

அரும்பு மட்டுமா பூக்கும்?
காத்திருக்கும் காதலர்க்குக் கண்கள் பூக்கும்
கவிஞர் மனதில் கற்பனை பூக்கும் 

காய் மட்டுமா கனியும்?
கருணை கொண்ட இதயம் கனியும்
பாசம் முதிர்ந்தால் சொற்கள் கனியும்
மெல்லிய இசைக்குக் கல்லும் கனியும்

பூ மட்டுமா காய்க்கும்?
உழைப்போர் அங்கமும் காய்க்கும்
கிணற்றில் விட்டுத் தண்ணீர் வாளியை
இழுத்து இழுத்துக் கைகள் காய்க்கும்
சாலைப் பணியாளர் தாரின் சூட்டைத்
தாங்கித் தாங்கிக் கால்கள் காய்க்கும்
இளநீர் வெட்டி இளநீர் வெட்டி
அரிவாள் பிடித்த விரல்கள் காய்க்கும்
லாரியில் வந்ததைக் கிடங்கில் சேர்க்க
மூட்டை சுமந்து முதுகு காய்க்கும்