திருச்சிராப்பள்ளி, மே 17- திருச்சிராப்பள்ளியில் உள்ள கிராப்பட்டி பாலத்தின் அடியில் உள்ள காலி இடம், ஒரு காலத்தில் குப்பை கிடங்காகக் இருந்தது தற்போது அது உள்ளூர் இளைஞர்களுக்கான கபடி மைதானமாக மாறியுள்ளது. மேம்பாலங்களுக்கு கீழே உள்ள இடம் பெரும்பாலும் குப்பை கொட்டும் இடமாகவோ அல்லது சமூக விரோதிகளின் புகலிடமாகவோ மாறிவிடுகிறது. ஆனால், கிராப்பட்டி பாலத்தின் அடியில் உள்ள இடம் அருகிலுள்ள கடைக்காரர்களின் சாமான்களை சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. தற்போது கபடி மைதானமாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கபடி போட்டியை நடத்துவதற்காக மேம்பாலத்தின் கீழ் 1,500 அடிக்கு மேல் பகுதி மக்கள் சுத்தம் செய்து சமன் செய்தனர். இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. “நாங்கள் முன்பு சாலைகளில் விளையாடினோம், ஆனால் இப்போது எங்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் தொடர்ந்து விளையாடுவோம். பள்ளி நாட்களில் அல்லது வார இறுதிநாட்களில் விளையாடுகிறோம், என்றார். 14 வயதான எஸ்.ரோஷன். பகுதி மக்கள் கூறுகையில், மேம்பாலங்களுக்கு கீழே உள்ள இடத்தை திறம்பட பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். “மேம்பாலங்களின் கீழ் பொதுப் பூங்காக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அந்த இடத்தை அழகுபடுத்தி, விளக்குகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதான மாக மேம்படுத்தவேண்டும். இதுபோன்ற இடங்களை பயன்படுத்தாவிட்டால் மீண்டும் இடம் ஆக்கிரமிக்கப்படும் என்கிறார் குடியிருப்பாளரான ஜே. நெல்சன். மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தைமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.