tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவல் துறையில் பணிபுரிந்து  ஓய்வுபெற்ற 8 பேருக்கு பாராட்டு

அரியலூர், ஜுன் 1-  அரியலூர் மாவட்ட காவல்துறையில், சிறப்பாகப் பணிபுரிந்து பணி ஓய்வில் செல்லவிருக்கும் 8 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.   தூத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன், குவாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசன், ஜெயங்கொண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ், கயர்லாபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம், விக்கிரமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பத்மா, குவாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் மகேஸ்வரி மற்றும் மாவட்டக் காவல் அலுவலக அமைச்சு பணியக உதவியாளர் கல்யாணகுமார் ஆகியோரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் பாராட்டு சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்.  மேலும், ஓய்வு பெற்ற காவல் துறையினர், காவல்துறைக்கு பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்தனர். பணி ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஓய்வு பெறுகின்ற காவல் துறையினர் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என்றும், மேலும், பணி ஓய்வு  பெறுகின்ற காவல் துறையினருக்கு ஓய்வு ஊதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆன்-லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு கைக்குழந்தையை கொன்று  இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கோட்டை, ஜுன் 1-  புதுக்கோட்டை அருகே பூவரசங்குடியில், இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவரசக்குடி, பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி ஸ்ரீகா(24), மகள் தன்ஷிகா(2). சரத்குமாருக்கும், ஸ்ரீகாவுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 8 மாதங்களாக சரத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை ஸ்ரீகா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வாசல்படியில் குழந்தை தன்ஷிகா இறந்த நிலையில் மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரின் உடல்களையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகா, கைப்பேசி வழியாக ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு ரூ.70 ஆயிரம் பறிகொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் கைக்குழந்தையைக் கொன்றுவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாதர் சங்கம் கண்டனம் இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசிலா, திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் வி.கலைச்செல்வி உள்ளிட்டோர், மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாவின் உடலைப் பார்வையிட்டதோடு, உறவினர்களைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினர். மேலும், ஆன்-லைன் சூதாட்டத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்-லைன் சூதாட்டத்தை முற்றிலுமாகத் தடைசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பாபநாசம், ஜுன் 1-  கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்டது. அதன் பின்னர், சாலையோரம் மழை நீர் வடிகாலுடன் சாலை பணி நடந்த நிலையில், அந்தப்பணி இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.  இதனால் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க பாபநாசம் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.