புதுக்கோட்டை, ஜன.22 - திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இரண்டாம் நாளாக கனிமவளத் துறையினர் புதன்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜகபர்அலி. சமூக ஆர்வல ரான இவர், அந்தப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததால், கடந்த ஜன.17 அன்று லாரி ஏற்றிக் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ஆர்ஆர் கிரஷர் உரிமையாளர்கள் உள்பட கொலையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சூழலில் திருமயம் அருகே யுள்ள துளையானூர் பகுதியிலுள்ள இரு குவாரிகளை கனிமவளத் துறையி னர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த னர். இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளாக மலைக்குடிப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 5 குவாரிகளிலும் இந்தக் குழுவினர் புதன்கிழமையும் இரண்டாம் நாளாக ஆய்வு செய்தனர். கனிமவளத் துறை திருச்சி உதவி இயக்குநர் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநர் லலிதா, நாகை உதவி இயக்குநர் சுரதா உட்பட கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களைச் சேர்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள், புவியியலாளர்கள் என 12 பேரைக் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடு பட்டுள்ளனர். எந்த அளவுக்கு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ட்ரோன் கேமரா மூலமும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.