தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் ரூ. 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு
பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றிக் கல்வியறிவு பெறவும் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
கல்லணையை புனரமைக்க ரூ. 400 கோடி
கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.1,037 செலவில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக, வரும் நிதியாண்டில் ரூ.400 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 2.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.