tamilnadu

img

மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையிலான அரசு 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் முன்னால் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததை அடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளனர். கடந்த 28-ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாக, பா.ஜ.க எம்.எல்.ஏ காளிதாஸ் கோலம்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றிருந்த நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ நானா படோல் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். சபாநாயகர் மாற்றப்பட்டது உள்ளிட்ட காரணங்களைக் கூறி பா.ஜ.க சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க சார்பில் இடைக்கால சபாநாயகர் ஏன் மாற்றப்பட்டார்? சட்டசபை தொடங்குவதற்கு முன்னதாக ஏன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பா.ஜ.கவுக்கு 1 மணிக்குத்தான் தகவல் சொல்லப்பட்டது. அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது? என்று காரணம் கூறி வெளிநடப்பு செய்தனர்.

பா.ஜ.க வெளிநடப்புக்கு பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 169 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றிபெற்றது.