tamilnadu

img

ஒரேயொரு எம்எல்ஏ..!

மகாராஷ்டிராவில் சட்ட மன்றத்தை உடனே கூட்டி  பெரும்பான்மையை நிரூபிக்கு மாறு தேவேந்திர பட்னாவிஸ்சுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிடுமா அல்லது கால அவகாசம் கொடுக்குமா என்பது நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை (இன்று) 10 மணிக்கு மேல்தான் தெரியும். எது நடந்தாலும், அராஜக மாக கைப்பற்றிய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுவது உறுதி. அந்த பேரம் ஏற்கெனவே துவங்கிவிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர்  என்ற பெயரில் அஜித் பவார் அளித்த கடிதத்தின் அடிப்படையில் அதிகாரத்தை பிடித்தாயிற்று. இப்போது அது உண்மை என நிரூபிக்க தேசிய வாத காங்கிரசின் 54 சட்டமன்ற உறுப்பினர் களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் களை, அதாவது 36 பேரை எப்படியேனும் தங்கள் பக்கம் இழுத்தாக வேண்டும் என்பது தான் பாஜகவின் முன் உள்ள திருப்பணி.

அவர்களிடம் விலை போய்விடாமல் தேசியவாதக் காங்கிரஸ் உறுப்பினர்களை பாது காத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் சரத்பவாருக்கு. சிவசேனாவிடமும் காங்கிரசிடமும் இருக்கிற ஊசலாட்டமான நபர்களுக்கும் பாஜக வலை விரிக்கக்கூடும் என்ற கவலை அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கு. இவர்கள் உட்பட தங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடும் என்ற கருதுகிற அனைத்து உறுப்பினர்களையும், சிவசேனா- தேசியவாதக் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், மும்பை நகரில் பல்வேறு ஐந்து நட்சத்திரக் ஹோட்டல்களில் கொண்டு போய் தங்க வைத்திருக்கிறார்கள்.  இதுபற்றி மும்பையிலிருந்து மற்றொரு முக்கியமான தகவலும் வந்திருக்கிறது. அந்த தகவலை வெளியிட்டிருப்பவர் அசோக் தாவ்லே. அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்.  அவர் சொல்கிறார்: “மேற்படி சிவசேனா- தேசியவாதக் காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் என்னை அணுகினார்கள். எமது கட்சியின் தகாணு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் வினோத் நிகோலேயையும் அணுகினார்கள். வினோத் நிகோலே, மற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு வந்து ஏதேனும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிக் கொண்டால் நல்லது, அதற்கான ஏற்பாட்டை செய்கிறோம் என்றார்கள். நாங்கள் சொன்னோம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு இப்படி ஒரு தேவை இல்லை; அவரை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்; கட்சி என்ன நிலைபாடு எடுக்கிறதோ அதை அவர் உறுதியாக அமலாக்குவார் என்றோம்.” 

நவம்பர் 25 திங்களன்று மும்பை ஹோட்டல்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் களின் புகலிடங்களாக மாறியிருந்த நிலையில், வினோத் நிகோலேவுக்கு வேறு மிகப்பெரிய வேலை இருந்தது. மகாராஷ்டிராவின் தானே- பல்கர் மாவட்டங்களின் ஏழு தாலுக்காக்களில் உள்ள  கிராமங்களிலிருந்து பேரணியாக வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை மூத்த தலைவரான அசோக் தாவ்லேயுடனும், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்களில் ஒருவரான பார்க்கியா மங்கத் உள்ளிட்ட தோழர்களுடனும் நேரில் சந்தித்து அவர்களது மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றார். தகாணு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளோடு வினோத் நிகோலேவும் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்தப் பகுதிகளில், அக்டோபர் மாதம் பெய்த பருவம் தப்பிய கனமழையால் ஏராள மான பயிர்கள் நாசமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு தர வேண்டுமென வலியுறுத்தித்தான் இந்த மாபெரும் பேரணி - முற்றுகை நடைபெற்றது.

288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரேயொரு எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மட்டும்தான் இன்றைய தினம் மகாராஷ்டிராவில் மக்களோடு நிற்கிறார். மக்களின் பிரச்சனைகளுக்காக களத்தில் நிற்கிறார்.

அசோக் தாவ்லே கூறுகிறார்:

“நாங்கள் செல்கிற கிராமத்தில் எல்லாம் மக்களின் கோப அலை அரசுக்கெதிராக கடுமையாக இருக்கும் என்று தெரியும். சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, முறையான ஒரு ஆட்சி அமையவிடாமல், மக்கள் பிரச்சனைகளின்பால் உடனடியாக கவனம் செல்லவிடாமல் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி அரசியல் அநாகரீகத்தின் உச்சத்தில் நிற்கிற பாரதிய ஜனதா கட்சியின் முகத்திரையை கிழித்தெறியும் விதத்தில் எங்களது பிரச்சாரமும் மக்கள் சந்திப்பும் அமையும். அஜித்பவாரை விலை பேசி வாங்கிக் கொண்டு, தேசத்தின் அரசியலமைப்பு சாசனத்தையே கிழித்தெறிந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி - அமித்ஷா - பட்னாவிஸ் கும்பலுக்கெதிரான கோபக் கனலை எமது கட்சியின் தலைமையிலான, விவசாயிகள் சங்கத்தின் தலைமையிலான போராட்டங்கள், மகாராஷ்டிரா முழுவதும் பற்றி பரவச் செய்யும்.”
 

- எஸ்.பி.ஆர்.