நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
சென்னை,நவ.8- எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது நடக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வெள்ளியன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய ஞானி, சித்தர். ஞானிகளையும் சித்தர்களையும் மத, சாதி எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. திருவள்ளுவர் அதற்கு அப்பாற்பட்டவர். பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளு வரை காவி உடையில் வெளியிட்டுள்ளது. ஆனால், ஊரிலுள்ள திருவள்ளுவர் சிலைகளில் காவி உடை அணிவிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை.
நாட்டில் மக்களுக் கான பிரச்சனைகளும், அவர்களுக்கான தேவைகளும் எத்தனையோ இருக்க இதனை பெரிய விஷயமாக்குவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றார். பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். இதுதொடர்பாக எதுவும் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அப்படி எதுவும் விவாதிக்கப் படவில்லை. பாஜகவில் இணைய வேண்டும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனக்கு பாஜக சாயத்தை பூச முயற்சி செய்துவருகிறார் கள். திருவள்ளுவர் போல எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டமாட்டேன் என்றார். பாஜகவை விமர்சித்து பேசிய சில மணிநேரத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, திருவள்ளுவர் விவகாரத்தில் ஊடகங்கள் மீது புகார் கூறினார். தமிழகத்தில் ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்திவிட்டன. தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதி காக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்தான சர்ச்சை பற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
திமுக-அதிமுக
ரஜினியின் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்பி பல மாதங்கள் ஆகிறது என்றார். அதிமுகவை பொறுத்தவரை தலைமைக்கு வெற்றிடம் இல்லை. தங்கள் கட்சிக்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.