குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக! ஆயிரமாயிரமாய் அணிவகுத்து எழுச்சி முழக்கம்
சென்னை, டிச. 23- நரேந்திர மோடி அரசுக்கு என்றென்றும் சிம்மசொப்பனமாக தமிழகம் திகழும் என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்தது டிசம்பர் 23 சென்னை பேரணி. எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆயிரமாயிரமாய், சாரை சாரையாய், விண்ணதிரும் எழுச்சி முழக்கங்களுடன் வந்துகொண்டே இருந்தனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து செய்திச் சேனல்களுக்கும் தவிர்க்க முடியாமல் இது பிரதான செய்தியாக மாறியது. சமூக ஊடகங்களில் சென்னை பேரணியே டிரெண்டிங் ஆனது. குடியுரிமை திருத்த மசோதா பற்றி பிரதமர் மோடி தில்லியில் உருப்படியில்லாத விளக்கங்களை அளித்த அடுத்த 24 மணி நேரத்தில், எத்தனை விளக்கம் அளித்தாலும் மோடி அரசின் உண்மை நோக்கம் இஸ்லாமிய மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதுதான் என்பதை அம்பலப்படுத்தும் விதமாக சென்னை பேரணி பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
தலைவர்கள் அணிவகுப்பு
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் துவங்கிய பேரணி லாங்க்ஸ் கார்டன் சாலை, ஆதித்தனார் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை வழியாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தை வந்தடைந்தது. இந்த பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் கே.எம்.காதர் மொகிதின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சத்யசீலன், கொங்கு தேசிய மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், சட்டமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சிகளது நிர்வாகிகள் அணி வகுக்க கட்சி தொண்டர்கள், தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அணி அணியாக கொடிகளுடன் கோரிக்கை முழக்கமிட்டு வந்தனர்.
ஆதரவு
இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து புதுப்பேட்டை, ஆதித்தனார் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் ஆகியவை புதுப்பேட்டை வியாபாரிகள் சார்பாக வழங்கப்பட்டன.
தேசியக்கொடியுடன் இஸ்லாமியர்கள்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த இந்த பேரணியில் பங்கேற்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள் தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். மாணவர்களும், இளைஞர்களும் பறை இசை முழக்கங்களுடன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்டமான தேசியக் கொடியுடன் பங்கேற்றனர். மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் வேடமணிந்து வந்தனர்.
இந்த பேரணியில் அரசியல் கட்சிகள், மாணவர், வாலிபர், மாதர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொழிற்சங்க அமைப்புகள், இஸ்லாமிய அமைப்பினர், பொதுமக்கள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது.
பேரணி துவங்கும் எழும்பூருக்கு காலை முதலே கூட்டம் வரத் தொடங்கியதால் பல ஆயிரக்கணக்கில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறையினர் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் குவித்து கலவர பூமி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். மேலும் பேரணியின் முகப்பிலும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணி வகுத்து வந்தனர். எந்த வகையிலும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமலும் அமைதியாகவும் மக்களுக்கு இடையூறு இல்லாமலும் நடந்த இந்த பேரணியால் வங்கக் கடலே புகுந்ததுபோன்று காட்சியளித்தது.
படம் : செ.கவாஸ்கர்