புதுதில்லி, அக்.31-
திரிபுரா மாநில முன்னாள் அமைச்சரும் கட்சியின் முதுபெரும் தலைவருமான பாதல் சௌத்ரியை பாஜக அரசாங்கம் துன்புறுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரிபுரா மாநில முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான பாதல் சௌத்ரியை திரிபுரா காவல்துறையினர் நடத்தும் விதத்தைப் பார்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோபத்தையும், கண்டனைத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தனியார்மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த அவரை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, காவல் நிலையத்தில் ‘லாக்-அப்’பில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு அடைக்கப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே பாதல் சௌத்ரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மூச்சுவிடவே சிரமப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த அரசாங்க மருத்துவர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியதன்பேரில் அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் பாதல் சௌத்ரி மீதான வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவை ரிசர்வ் செய்து வைத்திருக்கும் நிலையில்தான் காவல்துறை இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. எட்டு தடவை சட்டமன்ற உறுப்பினராகவும், திரிபுரா இடது முன்னணி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்தவரும் தற்போது மிகவும் நலிவடைந்தநிலையில் உள்ளவருமான பாதல் சௌத்ரிமீது இவ்வாறு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்த விஷயத்தில் திரிபுராவை ஆளும் பாஜக அரசாங்கம் எதுவும் தெரியாதென விலகிக் கொள்ள முடியாது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
(ந.நி.)