ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டம் பலமாகி வருவதை கண்டு ஆத்திரம் கொண்டு வேலைநிறுத்தக்குழுவின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய திட்டமிட்டது. அதன்படி ஜூலை 27ஆம் தேதியன்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அதே நேரத்தில் கடும் ஒடுக்குமுறையையும் தொழிலாளிகள் மீது ஏவியது.
1918ஆம் ஆண்டில் முதல் உலக யுத்தம் முடிந்ததும் இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம் ரயில்வே பணிகளை சீரமைத்து ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டது. இது தென்னிந்திய ரயில்வேக்கு மட்டுமல்லாது பி.என். ரயில்வே என்று அழைக்கப்பட்ட வங்காள - நாக்பூர் ரயில்வேயிலும் தொடங்கப்பட்டது. அங்கே 1927ஆம் ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போராட கரக்பூரில் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சென்னையிலிருந்து சிங்காரவேலரும் வி.ஆர்.காளப்பாவும் கலந்து கொண்டனர். வங்க மாகாண தொழிற்சங்க செயலாளர் முகுந்தலால் சர்க்கார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முடிவெடுத்தபடி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக சிங்காரவேலரும் காளப்பாவும் வில்லுவா, கரக்பூர் போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.
இதற்குப்பின் தென்னிந்திய ரயில்வேயில் பிரச்சனை வெடித்தது. ஆங்கிலேய ரயில்வே நிர்வாகமானது நாகப்பட்டினம், போத்தனூர் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களில் ரயில்வே பணிமனைகளை மூடிவிட்டு பொன்மலையில் ரயில்வே பட்டறையையும், பணிமனையையும் உருவாக்க திட்டமிட்டது. இதன் காரணமாக இந்த இடங்களில் உள்ள ரயில்வே ஊழியர்களை தான்தோன்றித்தனமாக பொன்மலைக்கு இடமாற்றம் செய்ய ஆரம்பித்தது. சிக்கன சீரமைப்புத் திட்டம், ஆட்குறைப்பு நடவடிக்கை போன்றவை தென்னிந்திய ரயில்வேயில் புகுத்தப்பட ஆரம்பித்தன.
1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3200 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மீதமுள்ள தொழிலாளர்களுக்கு தொழில் திறமை தேர்வு வைக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு கூறியது. ஆனால் தொழிலாளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர், மிரட்டலுக்கு பணிய மறுத்தனர். பல்வேறு கிளைகளும் டிவிஷன் சங்கங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு டி.கிருஷ்ணசாமி பிள்ளையை தலைவராகக் கொண்டு ஒரு மத்திய வேலைநிறுத்தக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் சிங்காரவேலரும், முகுந்தலால் சர்க்காரும் இடம்பெற்றனர். அவர்கள் இருவரும், பல்வேறு இடங்களுக்குச் சென்று ரயில்வே தொழிலாளிகளுக்கு உற்சாகமூட்டினார்கள். ஜூன் மாத இறுதியில் நாகப்பட்டினம், போத்தனூர் மற்றும் பொன்மலை தொழிலாளிகள் தொழில் திறமைத் தேர்வுக்கு சம்மதிக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாகம் பணிமனைகளை மூடி கதவடைப்புச் செய்தது.
இதைக் கண்ட போராட்டக்குழு ஜூன் 30ஆம் தேதியன்று நிர்வாகத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஆட்குறைப்பு உத்தரவை திரும்பப்பெற்று தொழில் திறமை தேர்வை உடனே ரத்து செய்யாவிடில் ஜூலை 14ஆம் தேதி முதல் பொது வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் நிர்வாகம் பிடிவாதமாக இருந்தது. எனவே ஜூலை 10ஆம் தேதி நள்ளிரவில் வேலைநிறுத்தம் துவங்கியது. அந்த ரயில்வே நிர்வாகத்தில் இன்ஜின் டிரைவர்கள், பயர்மேன்கள், கார்டு, டிக்கெட் கொடுப்பவர், பரிசோதிப்பவர், ரயில் நிலைய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயராக இருப்பார்கள் அல்லது ஆங்கிலேய - இந்தியர்களாக இருப்பார்கள். கலாசி தொழிலாளிகள், சுத்தம் செய்வோர், சுமை தூக்குவோர், பணிமனை சாதாரண தொழிலாளர்கள் ஆகியோர் மட்டுமே இந்தியர்கள். வேலைநிறுத்தம் பலத்த மோதல்களை சந்தித்தது. பல இடங்களில் சிக்னல் விளக்குகள், மின்சார கம்பிகள், தந்தி கம்பிகள் நாசம் செய்யப்பட்டன. தாம்பரத்தில் ரயில் ஊழியர்கள் மறியல் செய்தனர். அவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். 20ஆம் தேதி காலையில் சென்னைக்கு வந்த ரயில்கள் ஆங்காங்கு ரயில்வே ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சில இடங்களில் டிரைவர்களும், பயர்மேன்களும் வண்டியிலிருந்து இழுத்து வெளியே தள்ளப்பட்டனர். தூத்துக்குடியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. ரயில் ஊழியர்களும், உள்ளூர் மக்களுமாக ஆயிரம் பேர் அதில் பங்கேற்றனர். தூத்துக்குடி, விழுப்புரம் போன்ற இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர். காட்டுக்குப்பம், அம்பாத்துரை, பூதலூர், விக்கிரவாண்டி போன்ற இடங்களில் ரயில்கள் தடம் புரளும்படி செய்யப்பட்டன. மணியாச்சி, மாயவரம், விழுப்புரம், மதுரை, விக்கிரவாண்டி, பன்ருட்டி, நெல்லிக்குப்பம், பூதலூர் போன்ற இடங்களில் ரயில்வே தொழிலாளிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே பல மோதல்கள் நடைபெற்றது. ஆங்கிலேய அரசாங்கம் போராடுகின்ற தொழிலாளிகள் மீது பெரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் ஆங்கிலேய ரயில் நிர்வாகத்தைக் கண்டித்து கூட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு நகரில் மட்டும் மூன்று கண்டனக் கூட்டங்கள் நடந்தன. இவற்றில் இரு கூட்டங்களில் பெரியார் கலந்துகொண்டு ரயில்வே தொழிலாளிக்கு ஆதரவு கொடுத்தார்.
ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டம் பலமாகி வருவதை கண்டு ஆத்திரம் கொண்டு வேலைநிறுத்தக்குழுவின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய திட்டமிட்டது. அதன்படி ஜூலை 27ஆம் தேதியன்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அதே நேரத்தில் கடும் ஒடுக்குமுறையையும் தொழிலாளிகள் மீது ஏவியது. வழிகாட்டும் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட பின் தற்காலிக குழு என்ற பெயரில் தோன்றிய ஒரு குழு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றது. இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்காக பலமாத காலம் தொடர்ந்து பல ரயில் நிலையங்களுக்குச் சென்று அந்த தொழிலாளிகளுக்கு ஊக்கமூட்டி வந்த சிங்காரவேலரும், முகுந்தலால் சர்க்காரும் ஜூலை 23ஆம் தேதி தஞ்சையிலிருந்து திருச்சிக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து தொழிற்சங்க அலுவலகம் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது. ‘தொழிலாளர்’ பத்திரிகை அலுவலகமும் சோதனையிடப்பட்டு நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தலைவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் பங்கேற்ற மிகப் பெரும் ஊர்வலத்தை நடத்தினர். இதேபோன்று திருச்சி நகரிலும் பெரும் கண்டன ஊர்வலம் நடந்தது.
- தொடரும்