100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சில சாட்சிகள் - 5
லெனினும் ரஷ்யப் புரட்சியும் கம்யூனிசக் கருத்துகளும் 1920-க்கு முந்தியே இம்மண்ணுக்குள் விதைக்கப்பட்டுவிட்டன .இன்னும் சொல்லப் போனால் ரஷ்யப் புரட்சி வெற்றி பெறும் முன்பே லெனினோடும் போல்ஷ்விக் கட்சியோடும் தொடர்பு கொள்ள முயன்றோர் உண்டு . 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் 24 வரை ஜெர்மனியில் ஸ்டுட்கார்டு எனுமிடத்தில் நடந்த இரண்டாவது உலக சோஷலிஸ்ட் கட்சி மாநாட்டில் இந்தியாவிலிருந்து பார்ஸி வகுப்பைச் சார்ந்த புரட்சிகரப் பெண் மேடம் பாய்க்காய்ஜி காமாவும் , சர்தார் சிங் ராஜி ராணாவும் பங்கேற்றுள்ளனர் .அம்மாநாட்டில் ஒரு இந்தியக் கொடியையும் இவர்கள் அறிமுகம் செய்துள்ளனர் .
இம்மாநாட்டில் இந்தியாவை வாட்டும் பஞ்சம் குறித்தும் ,பலியாகும் மனித உரிமைகள் ,சமத்துவமின்மை குறித்தும் மேடம் காமா உணர்ச்சி கொப்பளிக்க உரையாற்றி உள்ளார். இம்மாநாட்டில் 25 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளனர் . ரஷ்யாவிலிருந்து லெனினும் ,லூனார்ஸ்கியும் வேறு சிலரும் பங்கேற்றுள்ளனர் . மேடம் காமாவும் ராணாவும் லெனினைச் சந்தித்துள்ளனர் . ஆனால் அது அதிகாரப் பூர்வ சந்திப்பாகக் கருத இயலாது .இருவரும் லெனினோடு உரையாடினார்களா என்கிற விபரம் ஏதும் இல்லை . மேடம் காமாவும் பங்கேற்ற புரட்சிக் குழுவினர் வந்தேமாதரம் என்கிற பத்திரிகை நடத்தி வந்துள்ளனர் .அதன் ஆசிரியராக இருந்த வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா ரஷ்யாவில் நடக்கும் புரட்சி முயற்சிகள் பற்றி மேடம் காமா மூலம் அறிகிறார் . இவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் உறவினரும் ஆவார் . ரஷ்யப் புரட்சிக்கு முன்பே போல்ஷ்விக் கட்சியோடு தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ரஷ்யச் சூழலில் இவரது முயற்சி கைகூடவில்லை . பின்னர் 1920 க்கு பிறகு ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் லெனினை சந்திக்க முடிந்திருக்கிறது .
ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற பின் சத்தார் கெய்ரி ,ஜாபர் கெய்ரி ஆகிய இரு முஸ்லிம்கள் லெனினைச் சந்தித்துள்ளனர் . அவர்கள் முஸ்லிம் தேசபக்த தீவிரவாதிகள் . அந்த சந்திப்புக்கு லெனின் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை . காபூலில் நிழல் இந்திய அரசை அமைத்து அதன் பிரதமராக இருந்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த குறுநில மன்னர் ராஜா மகேந்திர பிரதாப் சிங் . அவருடன் எம்.பி.பி.டி ஆச்சார்யா,செண்பகராம் பிள்ளை ,அப்துல்ராய் , பஞ்சாபி திலீப் சிங் ,பர்கத்துல்லா , இப்ராஹிம் ஆகியோர் லெனினைச் சந்தித்துள்ளனர் . 1919 மே 7 அன்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து பிரதாப் சிங் எழுதியுள்ளார். “பிரதிநிதிக் குழுத் தலைவர் என்ற முறையில் லெனின் அறையில் நான் முதலில் நுழைந்தேன். எதிரே அமர்ந்திருந்த அவரை நோக்கிச் சென்றேன். ஆனால் அந்த நாயகரோ உடனே எழுந்து அறையின் மூலைக்குச் சென்று இன்னொரு நாற்காலியை எடுத்துவந்து தன் அருகே போட்டு என்னை அமரச் சொல்லி திகைப்பில் ஆழ்த்திவிட்டார் . அவருக்கு “அன்பு மதம்”எனும் என் நூலை வழங்கினேன்.அவர் அதை ஏற்கனவே படித்துவிட்டதாகவும் அது டால்ஸ்டாயிசம் என்றார் . அப்போதுதான் நினைவுக்கு வந்தது முதல் நாள் ஓர் அதிகாரி அதை வாங்கிச் சென்றது . அவரிடம் நீண்ட நேரம் பேசினோம் .பர்கத்துல்லாவின் பணியாளரிடம் கூட உரையாடி சிலவற்றைக் கேட்டறிந்தார் .” இந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங்தான் 1957 ல் மதுரா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜனசங்க வேட்பாளர் வாஜ்பாயைத் தோற்கடித்தவர் .1979 ல் இறக்கும் வரை இடதுசாரியாகவே இருந்தார். இப்படி எல்லாம் நடந்த பல்வேறு முயற்சியின் உச்சமாகத்தான் 1920 அக்டோபர் 20 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை தாஷ்கண்டில் துவங்கப்பட்டது.
சத்ய பக்தாவின் முயற்சியும் சிங்காரவேலரின் முயற்சியும்
சோவியத் வரலாற்று ஆசிரியர் அன்தனோவா சிங்காரவேலரின் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தொடர்புகளைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளார்:-
கான்பூர் பத்திரிகையாளரான சத்ய பக்தா என்பவர் சட்டப்பூர்வமான ‘இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்தக் கட்சி கம்யூனிஸ்டு அகிலத்துடனும் மற்ற அயல்நாட்டுப் புரட்சி மையங்களுடனும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று அதன் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் அழுத்திக் கூறியிருந்தார்கள். இந்தக் காரணத்தால் அது நிறுவப்பட்டதை அதிகாரிகள் பொறுமையுடன் அனுமதித்தார்கள். சத்ய பக்தா அமைத்த கட்சி இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஈர்ப்பு மையமாக விளங்கவில்லை என்றாலும் இந்திய மார்க்சியவாதிகளின் தனித் தனிக் குழுக்களை ஒன்றாக இணைப்பதற்கான முன்னேற் பாடுகளை அவர் தொடர்ந்தார்.
ஒன்றிணைப்பு மகாநாடு கூட்டுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு இடதுசாரி காங்கிரஸ்காரரான ஹஜரத் மொஹானியின் தலைமையில் ஒழுங்கமைப்புக் கமிட்டி நிறுவப்பட்டது. இதன் பயனாக இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மகாநாடு 1925, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னை கம்யூனிஸ்டு எம்.சிங்காரவேலரின் தலைமையில்நடந்தது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை அமைப்பது என்றும் அதன் மையத்தை பம்பாயில் வைத்துக் கொள்வது என்றும் மகாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற் குழுவின் செயலாளர்களான ஜே.பெகெர்ஹொத் தாவும் எஸ்.வி.காட்டேயும் பதவி ஏற்றார்கள். இந்தியாவில் இருந்த முக்கியமான கம்யூனிஸ்டுக் குழுக்கள் எல்லாவற்றினுடையவும் பிரதிநிதிகள் மத்தியச் செயற்குழுவில் இடம் பெற்றார்கள். உழைப்பாளி மக்களின் சட்டப்பூர்வமான வெகுஜன நிறுவனத்தை - தொழிலாளி-விவசாயிக் கட்சியை - கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நிறுவுவதற் கான முதல் முயற்சி 1923லேயே சிங்காரவேலரால் மேற்கொள்ளப்பட்டது”
- பெரணமல்லூர் சேகரன்