tamilnadu

img

மொழிப் பிரச்சனை பற்றி நமது கட்சியின் நிலைப்பாடு - எம்.பசவபுன்னையா

...நேற்றைய தொடர்ச்சி

இந்திய ஒன்றியத்தின் முதன்மையான 14 மொழிகள் அனைத்தையுமே ஆட்சி மொழியாக்குவது, நடைமுறையிலும் சாத்தியமே. அவசியமானதும் கூட. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று வாதிபடுபவர்கள் இதை உணர மறுக்கின்றனர். ஒரு சிறிய நாடான சுவிட்சர்லாந்து, கடந்த பல பத்தாண்டுகளாக மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்ற உண்மையை அவர்கள் அறியவில்லை.

இந்திய நாடாளுமன்றம், மொழிக்குழப்ப மேடையாகிவிடும் என்பது அவர்கள் வாதம். இந்த வாதம் பொருளற்றது, அறிவுக்கு பொருந்தாதது. ஏனெனில், இந்திய யூனியன் என்பதே பல்வேறு பெரிய, சிறிய மொழிகள் பேசும் மக்களைக் கொண்டது. இத்தகைய யதார்த்த உலகிலிருந்து பிரிந்து, இந்திய நாடாளுமன்றம் மட்டும் தனியே சந்திரலோகத்தில் பறக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சி விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தில், 14 பெரும் மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டு, மைய அரசாங்கத்தின் நிர்வாகமும், நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நடத்துவதில் பெரும் தடையாக இருக்க முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் கட்சித் திட்டம், மொழிப் பிரச்சனை பற்றிய கட்சியின் நிலையை, ஐயத்துக்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. அது பின்வருமாறு:

நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் அனைத்துத் தேசிய மொழிகளும் சமமானவை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தங்களது பொருளாதார சமுதாய-அறிவுப் பரிமாற்றங்களின் வளர்ச்சிப் போக்கில், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலுள்ள மக்கள், அவர்களது தேவைகளுக்கு மிகவும் பொருந்துகின்ற ஒரு தொடர்பு மொழியை அவர்களே நடைமுறையில் வளர்த்துக் கொள்வார்கள்.

நிர்வாகம், சட்டமியற்றுதல், நீதித்துறை, கல்வி புகட்டுதல் ஆகியவற்றில், ஆங்கிலம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் தேசியமொழிகள் இடம்பெற வேண்டும்.

கல்வி நிலையங்களில் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை இருக்க வேண்டும்.

அம்மாநிலத்தின் கல்வி நிலையங்களிலும் உச்ச கட்டக் கல்வி வரையிலும் மாநில மொழியே பயன்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துச் சட்டங்களும், அரசாங்க உத்தரவுகளும், தீர்மானங்களும், அனைத்துத் தேசிய மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். ஆட்சி மொழியாக இந்தி பயன்படுத்தப்படுவது கட்டாயமாக்கக் கூடாது.

தேவைப்படும் இடங்களில், அம்மாநிலத்தின் தேசிய மொழி தவிர, சிறுபான்மை மக்களின் மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஏற்பாடு இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில், எந்த தேசிய மொழியிலும் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, மற்ற அனைத்துத் தேசிய மொழிகளிலும் அவர்களது பேச்சு மொழி பெயர்க்கப்படுவதற்கு வகை செய்யப்பட வேண்டும்.

ஒரு குறிப் பிட்ட மொழி பேசும் மாநிலத்தில், அம்மாநிலத்தின் அனைத்து பொது நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் நிர்வாகத்தில் அம்மாநிலத்தின் தேசிய மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.

உருது மொழியும் அதன் எழுத்து வடிவமும் பாதுகாக்கப்ப ட வேண்டும்”.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடுவதற்கு உறுதி கொண்டுள்ளது. அதே வேளையில் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது. ஏனெனில், வேறுபட்ட மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற போர்வையில் ஒரே ஆட்சி மொழியாக இந்தியைத் திணிப்பதே இந்த மும்மொழிக் கொள்கையின் நோக்கம். 1967 டிசம்பர் மாதத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் தீர்மானம் ஒன்றின் வாயிலாக இதைத் தெளிவுபடுத்தியுள்ளது; “எங்களது கட்சி, கல்வி அரங்கில் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது. ஏனெனில், அக்கொள்கை குழந்தைகள் மீது, ஆங்கிலம், இந்தி மற்றும் வேறொரு நவீன மொழி ஆகியவற்றைத் திணிக்கிறது.  குழந்தைகள் மீது அத்தகைய தேவையற்ற சுமையை சுமத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் குறைந்த பட்ச கல்வி மற்றும் பொதுவான அறிவுத்திறன் பெறுவதைத் தடை செய்கிறது” என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

முடிவுரையாக, ஒன்றைத் தெளிவுபடுத்துவது அவசியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியையோ அல்லது வேறு எந்த மொழியையோ அல்லது தங்களது தாய்மொழி தவிர வேறு மொழிகளையோ கற்பதை எதிர்க்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட எந்த ஒரு மொழியையும், ஆட்சி மொழியாக மற்றவர் மீது திணிப்பதை எதிர்க்கிறது. தங்களது தாய்மொழி தவிர மற்ற இரண்டு மொழிகளைக் கற்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துவதை கட்சி எதிர்க்கிறது. தொன்மையான உலக இலக்கியங்களிலிருந்து, பொருளாதாரம், அரசியல், அறிவியல், கலாச்சாரம், தொழில்நுட்பம், சமூக விஞ்ஞானம் முதலிய நவீன அறிவு வரை அனைத்தையும் புகட்டுகின்ற அளவுக்கு, இந்தியாவில் எந்தவொரு மொழியும், முன்னேறிவிடவில்லை என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ரஷியன் முதலிய மொழிகளில் அவை உண்டு. தனக்கும், இந்த நாட்டுக்கும், மிகவும் அண்மைக்கால விஷயங்கள் உள்ளிட்ட நவீன அறிவியல் செய்திகளைப் பெற வேண்டுமென்றால், இந்த நான்கைந்து மொழிகளில் ஒன்றின் அறிவு, ஒருவருக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஆகவே, ஒருவர் இந்த மொழிகளில் ஒன்றையோ, பலவற்றையோ கற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து தர வேண்டும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும், அம்மொழி அவர்கள் மீது திணிக்கப்படவோ, கட்டாயப்படுத்தப்படவோ கூடாது.

இந்தியாவின் மொழிக் கொள்கை பற்றி சுருக்கமாக இவைதாம் எங்களது கருத்துக்கள். இத்தகைய கொள்கை ஒன்றுதான், இந்திய ஒன்றியத்தின், உண்மையான நிலைத்து நிற்கும் தேசிய ஒருமைப்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று நாங்கள் உறுதியாக  நம்புகிறோம். இந்திய ஒன்றியத்திலுள்ள பல மொழி பேசும் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் ஜனநாயக ஒற்றுமையை, இந்தக் கொள்கைதான் உறுதிப்படுத்தும் என்றும் உறுதியாக நம்புகிறோம். இதைத் தவிர, வேறு எந்த வழியும், இந்திய ஒற்றுமையை ஆபத்துக்குள்ளாக்கும் - நமது நாட்டிலுள்ள பிரிவினை மற்றும் சீர்குலைவுச் சக்திகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் - அன்னிய ஏகாதிபத்தியச் சக்திகளுக்குத்தான் உதவும்.

அன்றிலிருந்து இன்று வரை, மீண்டும் மீண்டும் அதே நிலையை வலியுறுத்தி வருகிறோம். செப்டம்பர் 1977 லிலும், இந்தப் பிரச்சனை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மத்தியக் கமிட்டியின் தீர்மானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: “மும்மொழிக் கொள்கை தோல்வியைத் தழுவியுள்ளது என்பதை அனுபவம் நமக்கு உணர்த்திவிட்டது. அது தோல்வியடைந்தது தவிர்க்க முடியாதது. ஏனெனில், நடைமுறை வாழ்வுக்கும், அக்கொள்கைக்கும் தொடர்பேதுமில்லை. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் மக்களது மொழியும், அம்மாநிலத்திலுள்ள மக்களில் 10 சதவீதத்துக்கு மேல் சிறுபான்மையினர் பேசும் மொழி ஏதுமிருந்தால் அந்த மொழியும், பள்ளிப் படிப்பில் மட்டுமல்லாது பட்ட மேற்படிப்பு உள்ளிட்ட, மேல் நிலைக்கல்வி நிலையங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த நிலையிலும், இந்தி கட்டாயக் கல்வியாக இருக்கக் கூடாது. இருப்பினும், தங்களது பிற்கால வாழ்க்கைக்குத் தேவைப்படும் என்று யாராவது கருதி, இந்தி பயில வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு உயர் நிலைக்கல்வி மட்டத்திலிருந்து, இந்தி பயிற்றுவிக்கப்படுவதற்கு வகை செய்ய வேண்டும். அதுபோலவே, உயர்நிலைக்கல்வி வகுப்புகளிலும், கல்லூரிகளிலும், ஆங்கிலம் கற்பிக்கப்படுவதற்கு வகைசெய்ய வேண்டும். இது மாணவர்களின் விருப்பத்துக்கு விட வேண்டுமேயன்றி, கட்டாயப் பாடமாக ஆக்கக் கூடாது”.