மோடியின் 100 நாள் ஆட்சியை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள் . இந்த நூறு நாள் ஆட்சியை துயரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. முன்னேற்றத் திட்டங்கள் இல்லை .பொருளாதாரம் வரலாறு காணாத பின்னடைவை சந்தித்து வருகிறது. கருப்பு பணத்தை எடுத்து மக்களுக்கு தருவேன் என சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, ரிசர்வ் வங்கியில் உபரி பணமாக இருந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ‘பறிமுதல்’ செய்துள்ளார். இந்த பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கப் போகிறாரா அல்லது மறுபடியும் கார்ப்பரேட் கம்பெனிக்கு கொடுக்கப் போகிறாரா என்பதுதான் கேள்வி. கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய 12 லட்சம் கோடி ரூபாயை வராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்து விட்டு, தேசிய வங்கிகளை பெரும் நட்டத்தில் தவிக்க விட்டு விட்டு, அதை சமாளிக்க வங்கிகள் இணைப்பு என்று சொல்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தரவேண்டிய கடனுக்கு அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜப்தி அவர்களுக்கு இல்லை. எனவே கடன் வாங்கிய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடன் தொகையை வசூலிக்க வேண்டும். விவசாயிகள், சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள், சிறு வியாபாரிகளுக்கும், கல்வி கடன் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.