ரயில்வே உற்பத்திப்பிரிவுகளைக் கார்ப்பரேட் மயமாக்கிடவும், ரயில்வே பிரிண்டிங் பிரஸை மூடிடவும் ரயில்வே அமைச்சகம் நாசகரமான முறையில் முடிவினை மேற்கொண்டிருப்பதை அரசாங்கத்தின் கவனத்திற்கும் இந்த அவையின் கவனத்திற்கும் கொண்டுவருவதுடன் அம்முடிவுகளை உடனடியாகக்கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று பூஜ்யம் நேரத்தின்போது டி.கே. ரங்கராஜன் பேசும்போதே இப்பிரச்சனையை அவையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது:
நாட்டில் இயங்கும் ரயில்வே உற்பத்திப் பிரிவுகள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை செம்மையாக செயல்படுத்தி வருவதுடன் நாட்டிற்குத் தேவையான ரயில் என்ஜின்கள், வேகன்கள், ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்வேக்குத் தேவையான பல்வகை கருவிகளையும் உற்பத்தி செய்து வருகின்றன. அவைகள் மிகவும் சிறப்பான சேவைகளைச் செய்து வருகின்றன. இவற்றை முதலில் கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கவும் பின்னர் தனியாரிடமும், அந்நியக் கார்ப்பரேட்டுகளிடமும் தாரைவார்த்திடவும் முடிவு எடுத்திருக்கிறது. இவ்வாறு செய்வது என்பது அவற்றின் சேவைகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
அதேபோன்று ரயில்வே பிரிண்டிங் பிரஸையும் தனியாரிடம் ஒப்படைத்திட முடிவு செய்திருக்கிறார்கள். ரயில்வே மிகவும் பெரிய துறை. ரயில்வே பிரிண்டிங் பிரஸ், ரயில்வேக்குத் தேவையானவற்றை அச்சடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தனியாரிடம் தாரை வார்த்தால் இறுதியாக என்ன நடக்கும்? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகள் இல்லாமல் மறைந்துவிடும். ஏனெனில் தனியார் யாரும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது இல்லை. எனவே இவ்வாறு நீங்கள் நாட்டில் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்ட முடிவு செய்திருக்கிறீர்கள். இட ஒதுக்கீடு ஒழிக்கப்படுமானால், பின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, இவ்வாறு ரயில்வே துறையின் உற்பத்திப் பிரிவுகளையும், பிரிண்டிங் பிரஸையும் தனியாருக்குத் தாரை வார்க்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே. ரங்கராஜன் கூறினார்.