செஞ்சி அருகே பட்டாசு மினி லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் இருந்து செஞ்சி நோக்கி மினி லாரி ஒன்று பட்டாசு பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7.30 மணிக்கு செஞ்சியிலிருந்து தங்கிக் கொண்டான் என்ற பேருந்து நிலையத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது லாரியில் புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் லாரி டிரைவரிடம் கூறினர். இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அருகில் இருந்த டீக்கடை, சலூன்கடை, உள்ளிட்ட 4 வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 3 பேர் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. அதில் ஓட்டுநர் இளவரசன், க்ளீனர் சாய்பாபா இறந்தது தெரியவந்தது. இன்னொருவர் யார் என இதுவரை தெரியவில்லை. மேலும் உடல்கள் ஏதாவது இருக்கிறதா என்று போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் செந்தில்வேலவன் (45), சுரேஷ் (45), பாஷா (38), பாஷாவின் மனைவி ஆயிஷா (32), ரங்கசாமி (60), விநாயகம் (40), மாரியம்மாள் (45) லாவண்யா (15), சிவசங்கரன் (40), கல்பனா (28) ஆகிய 10 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக ஆயிஷா, லாவண்யா மற்றும் கல்பனா ஆகியோர் திருவண்ணாமலைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் ஏதேனும் உடல்கள் கிடக்கிறதா எனக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மினி லாரி உரிமையாளர் வீராசாமி கைது செய்யப்பட்டார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.