tamilnadu

img

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்.... புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...

புதுச்சேரி:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடர் திங்களன்று  காலை 10:15 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதுச்சேரி முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரிதாஸ், ஏழுமலை மற்றும் முன்னாள் பேரவை உறுப்பினர்கள் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மாநில அந்தஸ்து
புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் விவாதத்திற்குப் பிறகு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

சட்ட நகல் கிழிப்பு
மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றஅரசினர் தீர்மானத்தை வேளாண்மைத் துறை அமைச்சர்கமலக்கண்ணன் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி  பேசியபோது, “வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 54 நாட்களாகவிவசாயிகள் தில்லி எல்லையில் போராடுகிறார்கள். இச்சட்டத்தால் கூலி வேலை ஆட்களாக விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் அடிமையாக்கப்படு வார்கள்” என்றார்.“பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டத்தால் ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயம் சென்றுவிட்டால்அவர்கள் நிர்ணயிக்கும் விலையில்தான் உணவுப்பொருட் கள் கிடைக்கும். தற்போது இந்திய உணவுக் கழகம் மூலம் தானியம் பெற்று மக்களுக்கு தருவது பாதிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவே கொண்டுவரப்பட்டு, விவசாயிகளுக்கு உதவாத சட்ட நகலை சட்டப்பேரவையில் கிழிக்கிறேன்” என்று குறிப்பிட்டதோடு, நகலையும் கிழித்து எறிந்தார்.

“முதல்வர் என்றாலும், விவசாயத்தை காக்கவேண்டிய குடிமகன்  என்ற அடிப்படையில் சட்டத்தை சட்டப்பேரவையில் கிழித்து எறிந்தேன்” என்றும் முதல்வர் நாராணசாமி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, மத்திய அரசை வலியுறுத்தும் முதல்வரால் முன்மொழியப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

அஞ்சலி
 தில்லியில் நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்த விவசாயிகளுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

புறக்கணிப்பு
இக்கூட்டத் தொடரில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்ற செயலாளருமான லட்சுமிநாராயணன் உடல் நிலை காரணமாக பங்கேற்கவில்லை. திமுக உறுப்பினர்கள்,  பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

;