tamilnadu

img

ஒருவழியாக பதவியேற்றது புதுச்சேரி அரசு.... பாஜக மிரட்டல் தொடர்கிறது....

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 23-ந் தேதி இறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை துணை நிலை ஆளுநர்(பொறுப்பு)  தமிழிசை சவுந்தரராஜனிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய். சரவண குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த அமைச்சர்கள் பட்டியலுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.   நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். புதுவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சரவை பதவியேற்றா லும் பாஜகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று ரங்கசாமியை மிரட்டி வருகின்றனர்.  மேலிடம் வாயிலாக ரங்கசாமிக்கு அழுத்தம் தருகின்றனர்.

;