tamilnadu

புதுக்கோட்டையில் கொட்டித் தீர்த்த மழை

புதுக்கோட்டை, டிச.1- புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலை யில் 2-வது நாளாக ஞாயிறு காலை  வரை புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, திருமயம், அரிமளம், அறந்தாங்கி, இலுப்பூர், அன்னவாசல், கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, மணமேல்குடி, காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக புதுக்கோட்டை நகரில் ஞாயிறன்று 2-வது நாளாக 11 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை, ராஜ கோபாலபுரம், பெரியார் நகர், கம்பன்நகர், கூடல்நகர், பழனியப்பா முக்கம், அடப்பன்வயல், சார்லஸ் நகர், உசிலங்குளம், காந்திநகர், போஸ்நகர், கலிப்நகர், புல்பண்ணை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலையில் ஆறுபோல் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதே போல புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள பல்லவன் குளம் நிறைந்தது. இதனால் குளத்தின் அருகே உள்ள சாந்தநாத சுவாமி கோவில், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. பூ மார்க்கெட் பகுதியில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதே போல கல்யாணராமபுரம், திருக்கோ கர்ணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  குளங்கள் நிறைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.  இதேபோல வட்டார போக்கு வரத்து அலுவலகம், மாவட்ட விளை யாட்டு மைதானம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளிட்ட பகுதிகளி லும் மழைநீர் புகுந்தது. இதனால் புதுக்கோட்டை பெரியார்நகரில் 2-வது நாளாக சாலையில் மழைநீர் ஆறுபோல் சென்று கொண்டே இருக்கிறது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் புதுக்கோட்டை நகரில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை நக ராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், உதவி பொறியா ளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பொக்ளின் எந்திரத்தின் உதவி யுடன் கழிவுநீர் கால்வாய், வரத் துவாரிகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்தனர். மேலும் மழைநீர் புகுந்த இடங்களுக்கு சென்று, மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் ஆதனக்கோட்டை 33, பெருங்களூர் 38, புதுக்கோட்டை 113, ஆலங்குடி 49, கந்தர்வகோட்டை 46, கறம் பக்குடி 56.80, மழையூர் 59.20, கீழாநிலை 45.40, திருமயம் 32.40, அரிமளம் 47.40, அறந்தாங்கி 42, ஆயிங்குடி 88, நாகுடி 78.20, மீமிசல் 93.20, ஆவுடையார்கோவில் 55.80, மணமேல்குடி 78, கட்டுமாவடி 68, இலுப்பூர் 19, குடுமியான்மலை 17, அன்னவாசல் 37, விராலிமலை 29, உடையாளிப்பட்டி 11.20, கீரனூர் 40, பொன்னமராவதி 9, காரையூர் 72 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிக பட்சமாக புதுக்கோட்டையில் 113 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக பொன்னமராவதியில் 9 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. புதுக் கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,257.60 மில்லி மீட்டர் மழை பதி வானது.