tamilnadu

தங்களது கிராமத்தை மேம்படுத்தும் பணியில் முன்னாள் மாணவர்கள் 

புதுக்கோட்டை, ஜூன் 3-புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது ஏம்பல்கிராமம். இப்பகுதி மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களின் முயற்சியால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம்மதிப்பில் அல்ட்ரா ஸ்கேன் வசதியை ஏற்படுத்தினர். மேலும் ரத்த பரிசோதனை ஆய்வகம், ரூ.2 லட்சத்தில் செல்கவுண்டர் கருவி, சர்க்கரை பரிசோதனைக் கருவி,அரசு மூலம் ரூ.25 லட்சத்தில் மகப்பேறு பிரிவு கட்டுமானப்பணியும் நடைபெறுகிறது.மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாகவர்ணம் தீட்டுதல், கணினி, தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சுமார் 2,100 உறுப்பினர்களோடு ஊர்புறநூலகம் மேம்படுத்தப்பட்ட நிலையில் இயங்கி வருகிறது. மேலும் தினமும் ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி அமைத்தல், அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு தையல் பயிற்சி போன்ற பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான பணிகளையும் செய்து வருகின்றனர்.இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறியது, போக்குவரத்து, பொருளாதாரம் போன்றவற்றில் இக்கிராமம் பின்தங்கி இருப்பதால் இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் பள்ளியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட முயற்சித்தோம். கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்க50 கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி இருந்ததால் ரூ.15 லட்சத்தில் அல்ட்ரா ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஒத்துழைத்தால் மேலும் சாதிக்கலாம் என்றனர்.