tamilnadu

img

எய்டு இந்தியா சார்பில் நலிந்தோருக்காக கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு...

புதுக்கோட்டை:
எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நலிந்தோருக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் திங்கள்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இலவச வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறது. கஜா புயல்பாதிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டைமாவட்டத்தில் சுமார் 50 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இத்தகைய இலவச வீடுகளை கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள் ளது. அதன்படி ஏற்கனவே 12 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 4 வீடுகள் திங்கள்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மிஸ்டர் கூப்பர் மற்றும் ஜூம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆனந்த் மோகனராம் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய வீடுகள் திறப்பு விழா ஆலங்குடி தாலுகா கூழையன்காடு கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் தலைமை வகித்து புதிய வீடுகளை திறந்து வைத்தார். 

அவர் பேசுகையில், எய்டு இந்தியா நிறுவனம் மிகவும் வறுமையில் வாடும் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து இந்த வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட தன்னலமற்ற தொண்டு நிறுவனங்களால் நாட்டில் பல ஏழை, எளிய குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக் கின்றன எனப் பாராட்டினார்.நிகழ்ச்சியில் எய்டு இந்தியா நிறுவனத்தின் இணைச் செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன், கல்வி மாவட்ட இணை ஆய்வாளர் செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், ஊராட்சிமன்றத்தலைவர் ராஜாங்கம், ஒன்றியக் கவுன்சிலர் பெரியசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் அப்துல் சலாத், பட்டிமன்றப் பேச்சாளர் எல்.வடிவேல், தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், எய்டு இந்தியா நிறுவன நிர்வாகிகள் சுவாமிநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

;