பாட்னா:
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், மத்திய அமைச்சரவையில், தனது கட்சிக்கு 2 முதல் 3 அமைச்சர் பதவிகளை கேட்டிருந்தார். ஆனால், ஒரு அமைச்சர் பதவிக்கு மேல் தர முடியாது என்று பாஜக கூறிவிட்டது.
இதனால், ஏமாற்றத்திற்கு உள்ளான நிதிஷ் குமார், ஒரு அமைச்சர்தான் என்றால், எங்களுக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று அறிவித்து விட்டார். “அமைச்சரவையில் இடம்பெறுவது ஒரு சம்பிரதாயம்தான் என்று பாஜக கூறுகிறது; அப்படியொரு சம்பிரதாயமான பதவி எங்களுக்கு தேவையில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், “பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றிபெற்றதற்கு, எந்த ஒரு ஆளுமையும் காரணமில்லை” என்று மீண்டும் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நிதிஷ் குமாரை மட்டப்படுத்தும் விதமாக, மோடி அலையிலானலேயே பீகாரில் வெற்றி கிடைத்தது என்று பாஜக தலைவர்கள் கூறிவந்த நிலையில், மோடி பெயரால் எந்த வெற்றியும் வரவில்லை என்று மறைமுகமாக நிதிஷ் சாடியுள்ளார்.“பீகாரில் வாக்குகள் எந்த ஒரு ஆளுமையின் (மோடி) பெயரினாலும் வரவில்லை; பீகாரில் தேஜகூ அடைந்த வெற்றி குறித்து யாரும் குழப்பமடையக் கூடாது. அது பீகார் மக்களுக்கான வெற்றி, யாராவது இதை தன் சொந்த வெற்றி என்று கருதினால் அவர்கள் அறியாமையில் இருப்பதாகவே அர்த்தம்” என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
இதன்மூலம் மத்திய அமைச்சர் விவகாரத்தில், பாஜக - ஐக்கிய ஜனதாதளம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.