tamilnadu

கனமழை பெய்த இடங்களில் மக்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை உணவுத்துறை செயலாளர் பேட்டி

பழனி,அக்.13- கனமழை பெய்த இடங்களில் உள்ள மக்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று உணவுத்துறைச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் தமிழக உணவுத்துறை செயலாளர் ஜே.ராதா கிருஷ்ணன் அக்டோபர் 13 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த நியாய விலைக்கடையில் வேண்டுமானாலும் பொருட்களைப் பெற்றுக் செல்லும் முறை நடைமுறையில் உள்ளது. அதற்கு  ஏற்ப நியாய விலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு சில நியாய விலைக் கடைகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்கள் பொருட்கள் வாங்கச் செல்லும்போது தடங்கல் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழை பெய்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது 37 ஆயிரம் கடைகளில் 6000 கடைகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் அதனை அதிகப்படுத்தி ஆண்டுக்கு பத்தாயிரம் கடைகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.