tamilnadu

img

ஸ்டெர்லைட் : பொதுமக்களை குருவிகளைப் போல போலீசார் சுட்டுக்கொலை -ஐ.ஜி, டிஐஜி, எஸ்.பி உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை தேவை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாட்கள் அமைதியான வகையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் 100வது நாளான மே 22ம் தேதி பொதுமக்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் அடக்குமுறையை ஏவியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; எந்த ஒரு போலீசாரும் காயமும் அடையவில்லை. பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லா போதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களைக் குறிவைத்தும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை குருவிகளைப் போல போலீசார் சுட்டுக் கொன்றனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் எந்த திசையில் இருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர். போலீசாரின் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது குரூரமான செயல். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது

;