tamilnadu

img

இந்நாள் ஜுலை 27 இதற்கு முன்னால்

1929 போர்க் கைதி களை நடத்தவேண்டிய முறைகள்குறித்த ஜெனீவா ஒப்பந்தம் ஏற்பட்டது. போர்க்கைதி களை நடத்தும் முறைகளுக்காக வென்றே ஏற்பட்ட முதல் ஜெனீவா ஒப்பந்தம் இதுதான். இந்த ஒப்பந்தம்தான் இரண்டாம் உலகப்போரின் போர்க்கைதிகளைக் கையாள்வதில் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இதில் உணரப்பட்ட குறைகள், மீறல்கள் ஆகியவற்றைச் சரிசெய்வதற்காக 1949இல் திருத்தியமைக்கப்பட்ட ஒப்பந்தமே தற்போது நடைமுறையில் உள்ளது. போர்க்கைதிகள் என்ற பதம் 1660இல்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே, மற்றொரு குழுவுடன் போரிடும்போது, தோல்வியுறும் குழுவின் வீரர்களைப் பிடித்தலும் அவர்களைப் படுகொலை செய்வதும் அல்லது, அடிமைகளாக வைத்துக்கொள்வதும் பொதுவான நடைமுறைகளாகக் காணப்பட்டுள்ளன.

பண்டைய ரோமில் பார்வையாளர்களின் கேளிக்கைக்காகப் போரிட்ட கிளாடியேட்டர்கள், பெரும்பாலும் போர்களில் பிடிபட்ட எதிரி வீரர்கள் என்று நம்பப்படுகிறது. பெண்கள், குழந்தைகளை ஒன்றும் செய்யாவிட்டாலும், தொடக்க காலங்களில், போரிட்ட எதிரி வீரர்கள், பொதுமக்கள் என்று பிரித்துப்பார்க்காமல் அனைவருமே கைதுசெய்யப்பட்டனர். போர் அல்லாத காலங்களில் பிற குழுக்களின் பெண்களைக் கவர்ந்து வருதல் ரேப்ஷியோ என்றழைக்கப்பட்டது. இதிலிருந்து பிறந்ததே ரேப் என்ற சொல். ரோமுலஸ் ரோமை உருவாக்கும்போது, தங்கள் சமூகத்தைப் பெருக்குவதற்கு பெண்கள் தேவையான நிலையிருந்தது. அருகிலிருந்த சேபைன் மக்கள், தங்கள் பெண்கள் ரோமானியர்களை மணக்க அனுமதிக்காதபோது, அக்குழுவின் பெண்களைக் கவர்ந்துவந்தது ‘ரேப் ஆஃப் த சேபைன் விமன்’ என்று குறிப்பிப்பட்டுள்ளது. இதில் வன்புணர்வு இடம்பெறவில்லை. கவர்ந்துவந்த பெண்களை வேண்டி, சம்மதத்துடன் மணம்புரிந்த நிகழ்வுதான் இது. அதாவது, கைப்பற்றுதல் என்ற பொருளுடைய சொல்லான ரேப், பின்னாளில்தான் வன்புணர்வு என்ற பொருளைப்பெற்றது. பிற்காலத்தில் மதம் சார்ந்த போர்கள் ஏற்பட்டபோது, போரின் நோக்கமே எதிரிகளை அழிப்பதாகவே இருந்துள்ளது. அமெரிக்க விடுதலைப்போர், நெப்போலியப்போர்கள் ஆகியவற்றின்போதுதான், போர் நடக்கும்போதே கைதிகளைப் பறிமாற்றம் செய்தல் தொடங்கியது. சால்ஃபெரினோ போரில் சிகிச்சைக்கு வழியின்றிக்கிடந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களைக்கண்டு, ஹென்றி டூனாண்ட் எடுத்த முயற்சியில் செஞ்சிலுவைச்சங்கமும், போர்விதிகளுடன், போர்க்கைதிகள்பற்றிக் குறிப்பிட்ட முதல் ஒப்பந்தமான 1864 ஜெனீவா ஒப்பந்தமும் ஏற்பட்டன. இவை, 1899,1907 ஹேக் ஒப்பந்தங்கள், 1929,1949  ஜெனீவா ஒப்பந்தங்களில்  மேம்படுத்தப்பட்டன.(மேலும் விபரங்கள் இத்தொடரில் 2017 ஆகஸ்ட் 22இல் இடம்பெற்றுள்ளன)