tamilnadu

img

இந்நாள் ஜுன் 29 இதற்கு முன்னால்

1949 - இன ஒதுக்கல்(அபார்த்தெய்ட் அல்லது அபார்த்தீட்) முறையின் முதல் சட்டமான கலப்பின திருமணங்கள் தடைச்சட்டம் தென்ஆஃப்ரிக்கப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது(ஜூலை 1இல் அரச ஒப்புதல்பெற்று, ஜூலை 8இல் நடைமுறைப்படுத்தப்பட்டது). அபார்த்தீட் என்ற ஆப்ரிக்கன்ஸ் மொழிச் சொல்லுக்கு பிரித்து வைத்தல் என்று பொருள். 25 லட்சம் ஆண்டுகளுக்குமுன்பே மனிதனின் மூதாதைகள் வாழ்ந்த பகுதியான ஆப்ரிக்கா, மனித இனம் பரிணாமம் பெற்ற இடங்களுள் ஒன்று. ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே (முழுமையடைந்த)மனிதன் வாழ்நத இப்பகுதிக்குள் 1488இல் போர்ச்சுகீசியரான பார்த்தலேமு டயஸ் கால்பதித்தார். 1652இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்து, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதிலிருந்தே அதிகாரப்பூர்வமற்ற இன ஒதுக்கல் தொடங்கிவிட்டது. கேப் நகர-கிராமப் பகுதிகளுக்கிடையே பயணிக்கும் கருப்பினத்தவர் அனுமதி அட்டை வைத்திருக்கவேண்டும் என்று 1760இல் இயற்றப்பட்ட சட்டத்தின்மூலம் டச்சுப் பேரரசின் சட்டமாக்கப்பட்ட இன ஒதுக்கல் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது.

1795இல் கேப் குடியேற்றத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1802இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி டச்சுக்காரர்கள் மீண்டும் பெற்றாலும், 1806இல் மீண்டும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1833இல் இங்கிலாந்துப் பேரரசு முழுவதிலும் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும், ஆப்ரிக்காவில் வேறு பெயர்களில் அடிமை முறையைத் தொடரும் அவசரச்சட்டங்கள் இயற்றப்பட்டன. கருப்பினத்தவரின் வாக்குரிமையைக் குறைத்த சட்டம், இந்தியர் வாக்குரிமையைப் பறித்த சட்டம், ஆப்ரிக்கர்களின் நில உரிமையைக் குறைத்த சட்டம் உள்ளிட்டவை 1890களில் இயற்றப்பட்டன. 1910இல் தென்ஆப்ரிக்க ஒன்றியம் உருவாக்கப்பட்டபின், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை, வெள்ளையர் தவிர்த்த மற்றவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர பிற இடங்களில் நிலம் வாங்குவதற்குத் தடை உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன. ‘தேசியக் கட்சி’ 1948இல் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி இயற்றிய, மக்களை வெள்ளையர், கருப்பினத்தவர், (வெள்ளையல்லாத!) நிறத்தவர், இந்தியர், ஆசியர் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பு, கருப்பினத்தவரின் குடியுரிமை பறிப்பு முதலான இன ஒதுக்கல் சட்டங்கள் 1991வரை நடைமுறையிலிருந்தன.