1944 - முதன்முறையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று புவியைக் கடந்து விண்வெளியை எட்டியது. வஞ்சம்தீர்க்கும் ஆயுதம் என்ற வரிசையில் ஜெர்மனி உருவாக்கிய முதல் ஆயுதம்தான் உலகின் முதல் ஏவுகணை(இத்தொடரில் 2019 ஜூன் 19இல்). அதில் இரண்டாவதான வி-2தான் உலகின் முதல் நீண்டதொலைவு, வழிநடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை. வெர்னெர்-வோன்-ப்ரான் உருவாக்கிய ஏ-4 ராக்கெட்டே வி-2 ஏவுகணையாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே, பீனமுண்டே ராணுவ ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட்டைப் பலமுறை செங்குத்தாக ஏவி சோதித்தது ஜெர்மனி. அவ்வாறான ஒரு முயற்சியில்தான் 176 கி.மீ. சென்றது எம்.டபிள்யூ.18014 என்று பெயரிடப்பட்ட இந்த ஏ-4 வகை ராக்கெட். இதன்மூலம் கார்மன் கோடு என்று வரையறுக்கப்படும் புவியின் வளிமண்டலத்திற்கும், விண்வெளிக்குமான எல்லையான 100 கிலோமீட்டரைக் கடந்தது. ஆனாலும், சுற்றுவட்டப் பாதையை எட்டாததால் விழுந்துவிட்டது. தியோடார்-வோன்-கார்மென் என்ற ஆய்வாளர்தான் புவியின் வளிமண்டலம் எவ்வளவு உயரம்வரை உள்ளது என்பதை முதன்முதலில் கணக்கிட்டார். அதனால் இந்த எல்லை அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 1933இல் நாஸிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. அப்போது ப்ரான் பட்டம்பெற்று, முனைவராவதற்கு ஆய்வு மேற்கொள்ளும் மாணவராக இருந்தார். 1934இல் விண்வெளிப் பொறியியலில் ப்ரான் முனைவர் பட்டம் பெற்றபோது, அவரது ஆய்வுக்கட்டுரையின் பெரும்பகுதியை நாஸி அரசு ரகசியமானதாக அறிவித்து, அவரை ராணுவ ஆய்விற்குப் பயன்படுத்திக்கொண்டது. உண்மையில், 1926இலேயே ராபர்ட் கொடார்ட் என்ற அமெரிக்க ஆய்வாளர், திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டை வெற்றிகரமாக சோதித்துவிட்டார். ஆனால் அவருக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரது ஆய்வுகளை கவனித்து, அதில் நாஸி அரசு ஆர்வம்காட்டியது. இதழ்களில் வெளியான அவரது வடிவமைப்புகளை ப்ரான் பயன்படுத்திக்கொண்டதுடன், நாஸி ஆய்வாளர்கள் நேரடியாகவே கொடார்டைத் தொடர்புகொண்டு ஐயங்களைத் தீர்த்துக்கொண்டனர். விண்வெளி ஆய்வுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியபின்னரே, ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராக கொடார்ட் அங்கீகரிக்கப்பட்டார். ராக்கெட் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை அப்போது அமெரிக்கா உணர்ந்திருந்தால், கொடார்டின் உதவி ஜெர்மனிக்குக் கிடைத்திருக்காது என்பதுடன், அமெரிக்காவும் முன்னேறிய நிலையிலிருந்திருக்கும் என்பதால், உலகப்போரின் போக்கேகூட மாறியிருக்கும்!